Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Book Synopsis. Show all posts
Showing posts with label Book Synopsis. Show all posts

January 20, 2023

செந்தில் ஜெகன்நாதன் - மழைக்கண் - பிற கதைகள் சிறுகதைகள் தொகுப்பு

 


அன்புள்ள செந்தில்,

தங்களுடைய மழைக்கண்&பிற கதைகள் தொகுப்பை வாசித்தேன். கதை வாரியாக எனது எண்ணங்கள்..


1. அன்பின் நிழல்

பலருடைய வாழ்வில் இக்கதையில் உள்ளது போல் ஒரு template உண்டு.  சுயம்பு பெற்றோர், பண கஷ்டத்தின் விறத்தி, ஒரு கணமும் காயாத அந்த இரவின் கண்ணீர், தற்கொலை பூச்சாண்டிகள். ஆயினும் என் பெற்றோர் என்ற நிலைப்பாடு.  கதையின் முடிவு அபாரம். பேரன்பில் இருந்த வந்த முடிவு அது. 

2. நித்தியமானவன் 

கலையின் மீது ஆசைப்பட்டு மிக பெரிய திட்டமிடலும் வழிகாட்டுதலும் இல்லாமல் வாழ்க்கையையும் தொலைத்து career-ஐயும் தொலைத்து அல்லோல் படுவதை ஒரு பெரிய பத்தி முழுவதும் விவரித்தது மிக உண்மையாக இருந்தது. அந்தக் கலைஞனை போல் வாழ்வில் புதிய லட்சியங்கள், கனவுகள் என்று புதிய துறைகளுக்குள் சென்று வாழ்வை இழந்தவர்களை பிரதிபலித்து இருந்தது. மேலும், அந்த agent வந்து “உன்னால் முடியும் பாஸ்கர்” என்று பாஸ் (எ) பாஸ்கரன் நயந்தாரா போல் pep talk கொடுப்போர்க்கு அக்கலைஞன் கொடுக்கும் பதில் மிக நேர்த்தி. நெத்தி அடி என்று கூட கூறலாம். ஏனெனில் யதார்த்தில் நமது பிரச்சனைகளை நம்முடன் இருந்து அதன் வேர்களை கண்டடைந்து தீர்ப்போர் அரிதினும் அரிது. நிதி உதவி செய்வார் உண்டு. மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதுமட்டும் போதாது தானே. ஒரு problem solving இருக்காது. அவனா தேடிக்கிட்டது அல்லது நமக்கு அதுல என்ன பெருசா தெரியும் என்று விட்டுவார்கள். இல்லை என்றால் எங்க நமக்கு நேரம் இருக்கு. நான் அந்த பக்கம் போமோது பேசுரேன் என்பார்கள். ஆனால் அந்த பக்கம் போகவே மாட்டார்கள். வருடங்களும் வயசும் கரைந்துவிடும்.

கதையின் இறுதியில், ஒரு பாரட்டு கூட செவியின் ஓராமாய் தான் கிடைக்கிறது. ஆனால் ஒரு கலைஞன் தன்னை கண்டடையும் இடம் - ஒரு infectious ஆன தருணம்.  அதன்பிறகு பின்நோக்கா தருணம்.  ஒரு நம்பிக்கை ஒளி அது.

3. எவ்வம்

இந்த கதை ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா அந்த சிறுவனின் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது மிக துன்பமாக இருந்தது. ஒரு சிறுவன் அடி உதையை கூட தாங்கிக்கொள்வான். ஆனால் தன் பெற்றோர் குறிப்பாக தந்தை அவனை ஒரு மனிதனாக கூட பார்க்காமல் அன்பு இல்லாமல் நடந்துக்கொள்ளும் தருணங்கள் மிக கொடுமை. ஒரு தந்தை தவறான வேலை செய்வது, வலிப்பு வந்தது நல்லது என்று சொல்வது, ஏன் நீ வலிப்பு வந்து நடிச்சி என்ன காப்பாத்துல என்று கேட்பது, பிள்ளை காண்பித்து காசு வாங்குவது, பஸ்ஸில் சீட்டு வாங்குவது அந்த குழந்தைக்கு எவ்வளவு ரணத்தை உண்டாக்கும். குழந்தை வைத்து பிறர் முன் வேஷமிட்டு பச்சோதாபம் தேடுவதெல்லாம் இழிவான / நேர்மையற்ற செயல்கள். குழந்தைகள் என்று நினைத்து செய்கிறார்கள். ஆனால் குழந்தைகள் என்றாலும் அது மிக ஆழமான விரிசல்களை உண்டாக்கும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடைவேளை அதிகரித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் பெற்றோர் தான் என்ன தவறு செய்தேன். ஊர்ல செய்யாததையா செய்தேன்? பட்டினியா போட்டு விட்டேன் என்று கூறுவர். எல்லாம் பசங்களுக்காக தானே செய்தேன். ஆனால் இவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் ஒரு அணையில் நீர் தேங்குவது போல் தேங்கிக்கொண்டே இருக்கும். ஒரு சிறு தவறு அந்த குழந்தையின் மனதில் அவர்கள் உறவை அத்துப் போக செய்துவிடும். வெளில இருந்து பார்ப்பவர்களுக்கு அது என்ன பெரிய குத்தம் என்று தோன்றும். ஆனால் அது ஒரு tipping point. அதை சொன்னா புரியவே புரியாது. கொஞ்சம் தண்ணீர் அதிகமானாலும் உடைந்த அணை உடைந்தது தான். அதனை கட்டமைப்பது எளிதல்ல.

4. முத்தத்துக்கு (கனலி)

எனக்கு இந்த கதையில் இரண்டு விஷயங்கள் பிடித்தது 1. ஒரு 40 வயது இளைஞன் காலாகாலத்துல கிடைத்து இருக்க வேண்டியவை கிடைக்காமல், அவனுக்கு அது கிடைக்கும் பொழுது அது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்து விடுகிறது. இளவயதில் கிளர்ச்சியாக (அதில் ஒன்றும் தவறில்லை) அனுபவித்து இருக்க வேண்டிய ஒரு முத்தம் 40 வயதில் பதற்றமாக (ஏதோ குற்றத்தை யாரும் செய்யாததை செய்வதுப்போன்று) மாறி விடுகிறது. அதன்பின் பல மன தடுமாற்றங்கள். 2.  இச்சமுதாயத்தில் (நண்பர்கள், உறவினர்கள், அலுவகத்தில் இருப்பவர்கள்) பலர் எப்படி நுண்ணுணர்வு அற்று இருக்கிறார்கள் என்று திரையிட்டு காண்பித்தது. 

5. மழைக்கண்

இந்த கதையில் அந்த அம்மாவின் மூலம் பருத்தி விவசாயத்தை கண்முன் காண்பித்து விட்டீர்கள் என்றே சொல்வேன். (நேத்து order பன்ன 30 books வந்ததா வீட்ல photo எடுத்து அனுப்பினார்கள். அதை பார்த்த போது மகப்பேறு மருத்துவமனை குழந்தைகள் தான் நினைவுக்கு வந்தது. அந்த படிமத்தை மறக்கமாட்டேன் என்று நினைக்கிறேன்).

எனக்கு அந்த இறுதி முடிவு(?) பருத்தி புடவையை தொட்டுப்பார்க்கும் இடம் கண்கலங்க செய்துவிட்டது. அவள் வேலையில் பருத்தி செடியை எப்படி பார்த்துக்கொண்டாள், புச்சிகள் புழுக்கள் கால்நடைகள் களைகள் என்று எல்லாவற்றிலிருந்தும் பாதுகாத்தாள். ஒரு பூச்சி கடி என்றதும் அந்த பருத்தியே புடவையாக அவளுக்கு ஒரு மருந்தாக ஒரு அரவணைப்பாக அமைவதாக எனக்கு தோன்றியது. நாம் ஒரு வேலையை ஒழுங்கா செய்தால், இப்பிரபஞ்சத்தில் நம் வேலை எப்படி எல்லாம் கைகொடுகிறது.

7.நெருநல் உளளொருத்தி 

இக்கதைப் வாசித்த பின்பு எனக்கு என்ன தோன்றியது என்றால், 1) ஒருவேளை பூங்கோடி அவள் நாத்தனாரை முதலிலேயே ஒழுங்காக நடத்தி இருந்தால் பிற்காலத்தில் அவளுக்கு அந்த நிலைமை வந்து இருக்காதோ? காலம் நம்மை மிக கொடுமையாக தண்டிக்கும் 2) தங்கை மாறியதில் ஆச்சர்யம் இல்லை எனினும் அது மிக தவறு 3) பூங்கொடி ஒரு குழந்தையாவது இந்த வறுமையில் கஷ்டப்படாம இருக்கட்டுமே என்று ஊரைவிட்டு சென்று விடுகிறாளோ?

8.காகளம் (தமிழினி)

ரொம்ப பிரமாதமா எழுதப்பட்ட கதை. அந்த உலகத்துக்கு மிக எளிதாக செல்ல முடிந்தது. எனக்கு சில விஷயங்கள் ரொம்ப பிடிச்சது 1) நம்ம மனசு உடம்பு இரண்டும் நல்லா இருக்கனும். இல்லாட்டினா முகம் மலர்ச்சியா இருக்காது. இல்லாடினா அது நம்ம வேலைல வியாபரத்துல பிரதிபலிக்கும் 2) முதலாளிக்கு இசை ஒரு பற்று என்பதை தாண்டி எப்படி அவருக்கு ஒரு மன அமைதியை தருகிறது அவரை ஒரு பண்பட்டவராக வைத்துகொள்கிறது. எல்லாருக்கும் வாழ்க்கைல அந்த மாதிரி ஒன்னு வேண்டும். இல்லை என்றால் (கல்லாவில், ஊதியத்தில் வரும்) பணம் நம்மை சமநிலையிலும் சந்தோஷத்தில் அமைதியிலும் வைக்காது 3) (புத்தகத்தில் /இனையத்தில் சில பத்தி வித்தியாசம் இருக்கு) - அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் ஊர்ல யாரும் பன்னாத தப்பையா பன்னிட்டேன் இல்ல அப்படி என்ன பெரிய தப்பு பன்னிட்டேன் என்று கேட்போர்க்கு - இதுக்கு பேரு ஆணவம் என்று தெளிவாக கூறியது 4) இறுதியாக எது முதலாளியை முதலாளியாக ஆக்கியது. அது இசை, இசை கொடுத்த அமைதி/ நிறைவு/ நல்லெண்ணம் என்று எதுவாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் அந்த கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். நான் பல சமயம் செய்வது. பொதுவாக பலர் செய்துக்கொள்ளும் ஒப்பீடு தான்  - ஏன் அந்த குடும்பத்தில் பிரச்சனை இல்லை? உறவுகள் சீராக இருக்கிறது? வசதிகள்/வாய்ப்புகள்..?. அவர்களிடம் பேசிப்பார்த்தால் எங்கும் பிரச்சனை இருக்கிறது ஆனால் அடிப்படையில் அவ்வீட்டில் இருக்கும் அமைதி / ஒழுங்கு / முதிர்ச்சி என்று ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது. இப்பிரசச்னைகள், ஆசைகளை தாண்டி பார்ப்பதற்கு ஒரு மனபக்குவம். அவர்களை தரையில் கால் வைத்து நடக்க வைக்க.  ஆனால் அது வெறும் பணம் மட்டும் அல்லது. அது பல காலமாக கட்டமைத்து பாதுக்காக்கபட்ட தலைமுறைகளாக கவனமாக கைமாற்றப்பட்ட ஒரு ஒழுங்கு. அப்படி ஒன்றை கண்டடைந்தவராக முதலாளி இருக்கிறார். இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்க முடியாது. நாம் தான் பார்த்து பின்பற்ற வேண்டும்.

மொத்தமாக இந்த சிறுகதைள் தொகுதியில் எனக்கு பிடித்த அம்சம் என்னவென்றால், (ஜெயகாந்தனின் ஆவணப்படத்தில் அவர் சொல்வது போல்) ஒரு எழுத்தாளராக எதையும் வாசகரிடம் ஒளித்து வைத்து விளையாடவில்லை. அதற்ககென்று placard வைத்தும் வாசகரின் கண்ணை நிறைக்கவில்லை. 

உங்கள் எழுத்துப்பணியும், மற்ற ஆக்கங்களும் மேன்மேலும் வர, வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அன்புடன்

ராஜேஷ்
bit.ly/3wf3IeH

July 22, 2022

ஆரோக்கிய நிகேதனம் - வாசிப்பு

தாராசங்கர் பந்த்யோபாத்யாய (Tarasankar Bandyopadhyay) எழுதிய ஆரோக்கிய நிகேதனம் (Arogya Niketan) நாவலில் இருந்து நான் பெற்றவற்றை கீழ்வருமாறு தொகுத்துக்கொண்டேன். ஐயமின்றி கூறலாம் இது ஒரு செவ்வியல் என்று.

இந்நாவலை பற்றி ஜெயமோகனின் தளத்தின் மூலமாக முதலில் அறிமுகம் கொண்டேன். தொடர்ந்து வரும் கட்டுரைகள், கடிதங்கள் மூலம் உந்தப்பட்டு வாசித்தேன். ஜெ-விற்கு நன்றிகள். 

ஆரோக்கிய நிகேதனம் பற்றிய கட்டுரைகள்

ஆரோக்கிய நிகேதனம் - அறிமுகம் - தமிழ்.விக்கி / tamil.wiki தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ - எழுத்தாளர் ஜெயமோகன் மரணமின்மை எனும் மானுட கனவு- ஆரோக்கிய நிகேதனம் ஒரு வாசிப்பு - (ஆயுர்வேத மருத்துவர், எழுத்தாளர்) சுநில்கிருஷ்ணன் ஆரோக்யநிகேதனம்- சௌந்தர்


ஆயினும் சாஹித்திய அகெடமி வெளியிட்டுள்ள இந்நாவலின் மூன்றாம் பதிப்பைப் பற்றிய என் வருத்தத்தை பி.கு வில் கூறியுள்ளேன்.




ஆரோக்கிய நிகேதனம்

மனிதன் ஓர் உதவியற்ற பிராணி. மனிதன் உதவியின்றி இருக்கமுடியாது. உதவியை எதிர்நோக்கும் பிராணி அவன். ஆயுர்வேதம், நவீன ஐரோப்பிய மருத்துவமுறைகளைத் தாண்டி, மனிதனை அருவருப்புடன் நோக்காமல் அவனுக்கு எழுதப்பட்டதே இந்நாவல் என்று சொன்னால் மிகையாகாது.


ஆரோக்கியம்

உடம்புக்கு ஒன்றுமில்லை  என்ற சௌக்கியம் தான் வாழ்க்கைக்கு மிக அவசியம். உடம்பை நன்கு பாதுகாத்தால், கண்பார்வை கிழவயதில் மங்கவேண்டிய காரணமே இல்லை. 

உழைப்பால் உறுதியான தேகம், தெளிவான பார்வை, பரந்த மனநோக்கு கொண்ட ஒரு ஆள் அறையினுள் நுழைந்ததுமே ஒரு சோபை வருந்துவது போல் இருக்கும். 

ஆனால் ஒருவன் ஆழ்மனதில் அதிருப்தி இருந்து கொண்டே இருந்தால் அமிர்தத்தை ஒருவன் பெற முடியாது.

உயிருக்குள்ள ஆயுட்காலம், ஆரோக்கியமான நிலை இரண்டும் வெவ்வேறு. ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதென்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங்கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான். இல்லாதுபோனால், சக்தியை விருத்தி செய்துகொள்ளத் தெரிந்தால் மனிதனுக்கு ஆரோக்கிய திடகாத்திரம் ஏற்படும். எந்த நோயையும் அவனால் தடுத்துக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியும். மாறாக உடலை தன் உடலை, இந்த நோய்களின் வித்து நன்கு வளர்ச்சி பெறுவதற்கு வளமான இடமாக்கிக்கொண்டானெனில், எரிபொருளில் சிறு தீப்பொறி பற்றினால், பயங்கர ஜ்வாலையாக எழும்புவதுபோல், ஒரு நோய் மரணமாக மாறிவிடும்.

உடல்

மனிதன் நம்பிக்கொண்டிருக்கும் இந்த ஆத்மா மனிதனின் உடலை நம்பியே உள்ளது. இந்த உடற்கூடு ஒன்று இராதுபோனால் அது எதையும் பற்றி நிற்கமுடியாமல் தொங்கும் - அப்புறம் அது ஒன்றுமே இல்லை. 

தெய்வம் வீற்றிருக்கும் கோயிலை நன்றாகக் கவனிக்காதுபோனால் தெய்வம் அதில் எப்படி தெய்வம் உறையும்? தேகத்தை வருத்தி, அதைச் சீக்கிரமாக ஒழித்து விடப் பார்ப்பது ஒருவகை ஆத்ம தற்கொலை. இந்த உடலையும் பாதுக்காக்கவேண்டும். 

உரிய காலத்தில் பக்குவமாவது வேறு; பிஞ்சிலே பழுத்துப்போவது வேறு. அகாலத்தில் பழுப்பதில் ஏதாவது ஒச்சம் (குறைபாடுகள், பழுதுகள்) இருக்கும். அதன் திரட்சியில் ஏதவாது குறை தென்படும். ஆனால் உரிய காலத்தில் பக்குவமாவதில் பூரணப் பொலிவே தோன்றும்; குறையென்பதே இராது. உரிய பருவத்தில், நன்கு திரண்டுவரும் பழந்தான் ருசியாலும், மணத்தாலும், நிறத்தாலும் மனத்தை வசீகரம் பண்ணும். இம்மூன்று தன்மைகள் சேர்ந்து நிறை எழிலுடன் விளங்கும். 

ஒழுக்கம்

நீதி வழுவாத ஒரு லட்சிய புருஷர், எண்பது வயதிலும் சிறிதும் கூண் விழாமல் நிமிர்ந்து நிற்கமுடியும். நிலைத்து நோக்க முடியும். கண்ணில் சிறு துளியேனும் நீர் வராது. 

சாது சந்நியாசிகளின் தன்மை, நாடி இவற்றின் இயல்பே தனியானது; சாதாரண மனிதர்களிடம் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் இத்தகையோருக்குத் தேகத்தில் தாங்கும் சக்தி அதிகமாகிறது. கொடுத்த மருந்து வியப்பூட்டும் வகையில் வேலை செய்யும் (பெண் படாத நிலத்தில் போட்ட முதல் பயிருக்கான வித்துப்போல்)

யோகசாதனையில் ஈடுபட்டவரின் மனம் அற்புத சக்தி வாய்ந்ததாகும். அந்த உடலின் நலிவோ, பலவீனமோ அந்த ஒள்ளிய ஆத்மாவைச் சிறிதும் பாதிக்காது. மனதுள் உணர்வெழுந்து பொத்தலான உடலைத் துறந்து புதிய உடலையே கொள்வர்.

உண்மையில் ஒரு மகான்/யோகி, யோக சாதனையின் வாயிலாகத் தம் உடலின் அக உறுப்புக்களை வலிமை மிக்கதாகச் செய்துகொண்டுள்ளனர். விசித்திர விரதங்களை அநுஷ்டித்து வெளி இயற்கையின் சூழலை அடிக்கடி ஆளும் திறமையைப் பெற்றுள்ளனர்.

நியமப்படி இருப்பவர்களுக்கு நோய் கட்டாயம் தீரும். 

ஆயுள்

ஆயுள் என்பது ஒரு பெரிய மருந்து. பல யோகங்கள் செய்து சாதாரண மனிதர்களிடம் இருந்து வித்தியாசப்படலாம். அப்படி யோகங்கள் செய்வதால் எதையும் சகித்துக்கொள்ளும் வலிமை உண்டு. நோயுடன் போரிடுவது மருந்தைக்காட்டிலும், இந்த இந்த ஜீவசக்திதான். இந்த ஆயுள்பலந்தான்.

ஆயுட்காலம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது சாஸ்திரப்படி கூறலாம். ஆனால் கர்மபலத்தால் (வினைப்பயன்) அந்த ஆயுளின் வரம்பு கூடக் குறுகலாம்; பெருகலாம். விபசாரம் செய்து மனிதன் மரணத்தை அழைத்துக்கொள்ளலாம். தான் செய்த பாவத்தினாலேயே தன் வாழ்நாளை ஒருவன் எதிர்பாராதவிதமாகவும் குறுக்கிக் கொள்கிறான்.

மரணம்

இன்று இருப்பவர் நாளை இல்லை என்ற பெருமை உடையது இவ்வுலகு.  மரணம் எதையும் பார்ப்பதில் பட்சபாதமற்றது. எவரும் அமரர்கள் அல்ல. மரணம் சம்பவிப்பது நிச்சயமென்று அறிந்து அதை வரவேற்கக் கூடிய ஒரு மனோதிடம் மிக உயர்வானது; அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின், தேன் இல்லாத குறையை வெல்லம் கொண்டு நீக்குவது போலாகும். உலகைவிட்டுச் செல்வதென்றால் இதுபோல் விடைபெற்றுச் செல்லவேண்டும்; மரணதேவதையின் அதிதியாக, துளியேனும் முகம் கடுத்துக் கொள்ளாமல் சந்தோஷமாகவே பயணப்படவேண்டும். ஆனால் இந்த நாளில் மரணத்துக்கு இதுபோன்ற விருந்தினர் கிடைப்பது அரிது. 

மரணமே சாசுவதமான (எந்த உயிரும் மரித்தே ஆக வேண்டும் என்ற பேருண்மைமிக்க)  இப்புவியில் இப்படி அதை நினைந்து வருந்தியோ சஞ்சலப்பட்டோ ஒரு பயனுமில்லை. வாழும் பொழுது, குறிப்பாக முதுமையில், மரணத்தை நினைத்து துக்கப்படத்தேவையில்லை. 

அகால மரணம், பயங்கரமிக்கது தான். பயங்கர வலியையும், எரிச்சலையும் மூட்டி வாழ்க்கையே கசந்து போகும்படி செய்துவிடும் வியாதி. இந்த எரிச்சலைத் தணிக்கக் குளிர் மழைத் தாரையென மரணம் வந்து அமைதியையும் ஆறுதலையும் தருகிறது. ஆதலால் முதிய வயதில் மரணம் அமிருதம் போன்றது; இனிமை தருவது! அதைக்கண்டு பயப்படத்தேவையில்லை. மரணம் தான் முக்தி (விடுதலை). இதைவிட வேறு ஏதும் தேவையில்லை. ஏனெனில் அங்கே நம்முடைய கணவனோ/மனைவியோ, அம்மா, அப்பா, சகோதர்கள்,  உறவினர்கள் வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், பலர் கிழவன் கிழவிகள் இறக்க விரும்புவதில்லை. ஆதாவது பெயரன் கல்யாணம் என்று சாக்குக் கண்டுப்பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஜீவன் மஷாயின் தந்தை ஜீவனிடம் இப்படி கூறுகிறார் “நீ என்னுடைய வீரமகனடா! இந்த வாழ்க்கைப் போருக்கு அஞ்சாதவன். பின்வாங்கவில்லை; இளைப்பும் ஆறவில்லை. போர் முனையிலேயே மாள்கிறாய்! அதற்காக நீ அவமானப் படுவானேன்? எதன் எதிரே நீ தோற்றாய்? நீ யாரிடம் தோற்று நிற்கிறாயோ, அதனிடம் ராமன், கிருஷ்ணன், புத்தன், பீஷ்மன், துரோணன், நெப்போலியன் எல்லாருமேதான் தோற்று நின்றனர். அதைப்பற்றி வருத்தப்படாதே!” அதாவது மரணத்திடம் வரலாற்று நாயகர்களே தோற்று இருக்கிறார்கள். ஆதலால், வீரமாக அதுனுடன் தொடர்ந்து போரிட்டதனால், அவமானப்பட வேண்டாம்.

இளமை

இளமையில் ஒன்று உள்ளது; சரிவான தரையில் நீரின் ஓட்டம் விசைகொள்வதுபோல் ஒரு வேகம் உள்ளது. அச்சமயம், நல்லது கெட்டதுபற்றிய அறிவு, நீதி உபதேசங்கள், சமூகக் கட்டுப்பாடு யாவும் துச்சமாகிவிடும். மனக் குரங்கு எந்தக் கட்டுக்கும் அடங்காது. இந்த நீதி உபதேசங்கள் யாவும் மணலில் விட்ட நீர்போல் ஆகும். இளமையின் போக்கு சரிவான கீழிடம் நோக்கியே விரையும். டாக்டர் ஜீவன் மஷாய் மஞ்சரி அவருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தில் வெறுத்துப்போய் அவ்விஷத்தை கடைசிச் சொட்டுவரை பருகிவிட்டார். அதுவே அவருக்கு ரிபுவாக மாறியது.

பின்நாட்களில், இத்தனை வண்ண விசித்திரமான ஆசைகள் எதற்காக எழுந்தனவோ என்று நினைத்துக்கொண்டார் ஜீவன் மஷாய். ”இரு வண்ணங்கள் - பகல் இரவு - வெண்மை கருமை இவ்விரண்டையும் தவிர மற்ற வண்ணங்களை நீயேதான் உன் கையாலேயே அழித்துவிட்டாய். தகுதியற்றவன் கையில் கிடைத்தால் இந்த வண்ணங்கள் அழிந்து வீணாகத்தான் போகும். வேதனையின் விழிநீரினால் இதெல்லாம் பொய்யென்று நினைத்து அழித்தாய்” என்றது அவரது மனது. 

இந்த உலகில் அவமானம் ஏற்பட்டதும், உள்ளுக்குள் ஒரு மெலிவு பஞ்சினுள் நெருப்பெனக் கனலத் தொடங்கும். அந்த நெருப்புபழி தீர்த்துக்கொள்ளவேண்டுமென்ற உற்சாகத்தினால் தான் அணையும். தம் இதயத்துள் பற்றிய இந்த வெவ்வழல் எதிரியையும் பற்றி அவன் எரிந்து சாம்பலானால்தான் தணியும். இது நிறைவேறாதுபோனால், அந்தக் கனல் துளித்துளியாக அவனையே பொசுக்கிவிடும்.  பெருந்தகையோர், மகாத்மாக்கள் இவர்கள் விஷயமே தனிப்பட்டது. அவர்கள் இந்த மாதிரி அவமானம் ஏற்பட்ட சமயங்களில், தம் பொறுமையாலும், மன்னிப்பாலும் அதைத் தணித்துவிடுவர்!

ஆற்றாமை

மனிதனில் உள்ள ஆற்றாமயே அவனுக்கு சத்ருவாக வரும். அதைவிட்டொழிக்காவிட்டால் அதற்கு தீர்வில்லை ஏனெனில் ஆற்றாமை எந்த மருந்தாலும் தீராது

சாதாரண மனிதன் பணம், புகழை ஈட்ட நினைப்பான். அவன் அமைதியின்மையில் இருப்பான். அவனுக்கு இருந்த வேட்கை தீராது. பசி தீராது. சுற்றுவான், அலைவான். மனிதனின் முயற்சியால் ஏற்படுவது சாதனை. அது வருவதற்கு முன்னால் நல்ல நிலை வருகிறது. அதிலிருந்து ஆற்றாமை (இன்னும் சம்பாதிக்க வேண்டுமென்ற நசை); இதுவே பகையாகும். இதன் தூண்டுதலினால், மனிதன் அளவுக்கு மீறிப் போய் நோயில் விழுகிறான். அவன் எதிரே வந்து நிற்கிறாள் அந்தச் மரண தேவதை!

நோய்

பிரபஞ்சத்தில் இந்த மரணம் நிச்சயமானது; பிறப்பன யாவும் இறந்தே தீரவேண்டும். இம் மரணம் பலவிதமாகத் தோன்றும்; இது தடுத்தற்கரிது. சிலர் நோய் நொடியினால் மரிப்பர்; சிலர் காயம் பட்டு இறப்பர்; சிலர் தம் இச்சையால்/இச்சைபோல் இறப்பர், தற்கொலை புரிந்துகொண்டு. ஆனால் இந்தப் பிணிகள் தாம் மரணத்துக்கு இட்டுச் செல்லும் பெரும்பாதை. இந்த நோய் ஒன்றே மரணத்தின் ஸ்பரிசத்தை ஏந்தி வருகிறது. எல்லா வியாதிகளாலும் மனிதன் இறப்பதில்லை. ஆனால் அதற்கு இவை வழிகோலிடுகின்றன.

இந்தப் பிரபஞ்ச வாழ்வில் மனிதன் சந்நியாசிக்குரிய சக்தியைப் பெறாது போனாலும், எல்லா நசைகளையும் கட்டிப் பிடிக்காமல் போனாலும், சிலவற்றையாவது அவன் வென்று வரவேண்டும். ஏதோ இரண்டு அல்லது மூன்று வகையான நசைகள். சிலர் ஐந்து வகையினையும் (ஆறு பகைகளில் ஐந்து) வென்று வருகின்றனர். ஆனால் ஒன்று அவர்களால் முடியவில்லையென்றால் அதுவே அவர்களுடையை பலவீனத்திற்கான வாசலைத் திறந்துவிடும். மரணப் படைகள் அந்த வாசல் வழியாகவே மனிதனின் உடலில் புகுந்துக்கொள்ளும்.

மனிதன் பிராணி ஆயினும் அவன் உள்ளத்தில் மிருகத்திற்குரிய காமம், குரோதம், உலோபம் யாவும் நிரம்பியுள்ளவன். ஆனால் மிருகத்திற்குரிய சகிப்புத் தன்மை அவன் உடலில் இல்லை.  பசிக்கு அடிமைகள், உலோபத்திற்கு அடிமைகள், காமத்துக்கு அடிமைகள். பண ஆசை, புகழ்மோகம், வேலைப் போதை, ருசிகள், சபலங்கள் .. என, ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று என, நம்மை பலவீனப்படுத்தி, நோய்க்கான காரணியாக ஆகி, மரணத்திடம் சேர்கிறது. “மிகினும் குறையினும் நோய்செய்யும்” என்பதே வள்ளுவர் கூறுவதும்.

மனிதன் தன் உடலை இந்த நோய்களின் வித்து நன்கு வளர்ச்சி பெறுவதற்கு வளமான இடமாக்கிக்கொண்டான் எனில் அது அவனுக்கு அழிவை தேடித்தரும்.  எரிபொருளில் சிறு தீப்பொறி பற்றினால், பயங்கர ஜ்வாலையாக எழும்புகிறது. 

ஒரு வேலையிலும் ஈடுபடாத மனிதனின் புத்தியைச் சோம்பல் வந்து சூழ்ந்துக்கொள்ளும்.

மனிதன் தான் செய்யும் தீய வினையாலேயே அழிகிறான். மனிதனின் நடத்தையே அவனுக்குச் சத்துருவாக நிற்கும். அநாசாரம், வரம்பு மீறிப் போகும் நடத்தை, விபசாரம் இவற்றின் விளைவாக மனித இனம் நோய்வாய்ப்படும். இவற்றை விடவில்லை என்றால் நோய் அதிகமாகும். விட்டுத்தொலைத்தால் குறையும்.  குடி/மதுபானம், கஞ்சா, சிகரேட், புகையிலை, விபசாரம் மற்றும் அதையொட்டிய பல தீய செயல்களாலும் தன்னையே ஒருவன் நிர்மூலமாக்கிக்கொள்வான். இதைத் தவிர ஏதாவது நோயில் படுத்தால், உருக்குலைந்துப்போவான். 

நோய் அதிகரித்தால், மடமடவென்று பனையளவு ஏறிப்போகும்; ஆனால் குறையும்பக்ஷத்தில் தினையளவாகத்தான் இறங்கிவரும்.

நோயுடன் கஞ்சா போன்ற கெட்ட பழக்கமும் சேர்ந்தால் சொல்லுவானேன்? நோயாளி தேறமாட்டான். ஏனெனில் கஞ்சாவுக்கு ஏங்கிப்போய் வெறிப்பிடித்தவனாவான். அவர்களை மருத்துவர்களின் சிகிச்சை காப்பாறுவது கடினம்.

தீய பழக்கங்கள்

வீட்டில் நெருப்புப் பற்றினால், வீடே எரிந்து சாம்பலாகப் போக வேண்டுமென்பதில்லை. தண்ணிரைக் கொண்டு அணைக்கலாம். அணைக்கவும் முடியும். ஆனால் நெருப்புக்குத் துணையாகக் காற்று வீசத் தொடங்கினால் அது எவ்வளவு நீர்தான் கொட்டினாலும், அணையவே அணையாது! கடைசிவரை எரிந்து, சாம்பலாக்கிவிட்டுப் பின்புதான் நிற்கும். பலருக்கு வியாதிகள் வருவர்தற்கு முக்கியமான காரணம் அவர்களுக்குள் இருக்கும் கெட்ட பழக்கங்கள் ஆகும். 

மேலும், பிணி மரண ரோகமாக மாறும் சமயம் ஒருவனது தீய பழக்கமே அவன் புத்தியை ஆட்டிவைக்கும். அமுதமென்று எண்ணி நஞ்சை உட்கொள்ள அது தூண்டும். 

கெட்ட பழக்கங்கள் பலநாள் இருக்கும். ஆனால் இயற்கை எத்தனை நாள் இந்த அநாசாரத்தைச் சகித்துக் கொண்டிருக்கும்? வரம்புக்கு மீறிச் செல்லும், சிறிதும் உஷார் இல்லாமல் சென்றால் நோயில் படுக்கவேண்டியது தான்.  

கெட்ட பழக்கங்கள் அதிகமானால், பிணி மிகவும் சிக்கலாகிவிடும். உடல் இளைக்கும், ஆயுளும் குறையும்.  உதாரணமாக, லிவர், ஸ்ப்ளீன், அந்தப் பழைய மலேரியா, ரத்தச் சோகை, மதுபானத்தினால் வரும் விளைவுகள் இவையனைத்தும் சேர்ந்தால் ஒரு குழுப்பமான வியாதியாகிவிடும். இதனால் அகால மரணம் ஏற்படக்கூடும்.

நோயாளிகளின் பயங்கரத் தீயபழக்கங்களால் அவர்களை பிழைக்க வைப்பது எந்த ஒரு மருத்துவருக்கும் இயலாத காரியமாகிவிடும். 

மருத்துவம் / ஆயுர்வேதம்

வாள், கத்தி இரண்டுமே படைக்கலங்கள்தாம்; ஆனால் வித்தியாசம் இருக்கிறதே! வாளால் எருமையைப் பலி கொடுக்கமுடியாது. கத்தியைச் சுழற்றினால் மட்டும் இந்த காலத்துப் போர்முறை ஆகிவிடாது; ஆதலால், ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவமுறைகளும் நம் சாஸ்திரங்களும் காலத்துக்குச் சரிசமமாக நடைபோடவேண்டும்.

டாக்டர் ஜீவன் மஷாய் தனது குரு ரங்லாலின் அறிவுரையின் படி டாக்டரின் சிகிழிச்சை முறை, கவிராஜ் வைத்தியம், கைவைத்தியம் இந்த மூன்றையும் வைத்துக்கொண்டு ஒரு ட்ரை சைக்கிளிங் வாழ்க்கை ப் பயணம் செய்தார். அது ட்ரை-மோட்டார் போல் சென்றது.

இன்று, ஒரு கிளினிக் மட்டும் இருந்தால் பல உயிர்களை பிழைக்கச் செய்யலாம். மே! முதலிலேயே ‘ப்ளட் கல்சர்’ செய்தால், நல்ல மருந்துகள் கொடுத்தால் உயிர்களை பிழைக்க வைக்க முடியும்.  விஞ்ஞான முறைகள், ரத்த மல மூத்திர சோதனைகள், எக்ஸ்-ரேக்கள்,  மைக்ரோஸ்ப்கள் போன்ற க்ளினிக்கில் டெஸ்ட் இராமல் இந்தக் காலத்தில் ஓர் அடி எடுத்துவைக்க முடியாது

இந்தக் காலத்தில் எத்தனையோ நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து ஓரிடம் போவது சகஜமாகிவிட்டது. அவர்கள் வரும்போது புதுப்புது நோய்களை கொண்டுவந்து விடுகின்றனர். நீர், காற்று, நிலம் இவை மாறிப்போய் புதிய தோற்றம் கொண்டுள்ளன.

பழைய நோயால் தவிப்பவர்களுக்கு இன்றும் இந்நாட்டு வைத்திய முறைகள் மூலம் சிகிச்சை செய்து குணமாக்க முடிகிறது. ஆயினும், இன்னும் நிறைய இருக்கிறது. 

இன்னும் எத்தனையோ வகை புரியாத நோய்கள் இருந்தாலும், அதைரியமடையாமல், வெட்கப்படாமல், அதன் லக்ஷணங்களை ஆய்ந்து சிகிச்சை செய்ய முடியும். மேலைநாடு வைத்தியமுறைகள், விஞ்ஞான ரீதியான லாபரெடரிகள் போன்ற அன்று இங்கு இல்லாத இன்றைய சௌகரியங்களின் துணையுடன் ஆராயலாம். இவை உண்மையில் போராட்டமே. மரணத்துக்குச் சரிநிகர் நின்று நடத்தும் போர். இதில் தோற்றுப் போவதில் அகௌரவம் ஒன்றுமில்லை. 

உணவு

சாப்பாட்டு விஷயத்தையே எடுத்துக்கொண்டால், இயற்க்கையாக நம் உடலுக்கு சுவைப்பற்று இருக்கும்போது, கெட்ட உணவைத் தின்னாது. வயிறு நிரம்பியதும், இத்துடன் நில் என்று சொல்லிவிடும். அதற்குத் (மன)திருப்தியின் மூலம் நிவிருத்தி ஏற்படுகிறது. (விருப்பு ஓரளவுக்கு; அளவுக்குமேல் போனால் தெவிட்டுகிறது; வெறுப்பு ஏற்படுகிறது). 

ஆனால் இந்த இயற்கைக்குக் கெட்டதில் ருசி ஏற்பட்டுவிட்டாலோ, அதுவே இதற்குப் பகையாகி விடுகிறது. அப்போது ஆற்றாமை அதிகமாகிறது. திருப்தியே ஏற்படுவதில்லை. அந்த (இயற்கையான) வெறுப்புணர்வு ஓடிவிடுகிறது. ஊரெல்லாம் திரிந்து வயிறு வளத்துத் தன் உலோப குணத்தைத் திருப்தி செய்வதை குறியாக இருந்தால் ஆற்றாமை தீராது. நோய்களுக்கு ஆளாக நேரிடும்.  அவ்வுணவினால் தேக புஷ்டிக்குப் பதிலாக உடல் நலிவே ஏற்படும். அதனால்தான் இந்த நசைகள் - பகைகள் - சேர்ந்துவிட்டால், நோய் தடுக்கமுடியாதபடி மரணத்தை நோக்கி விரைகிறது. திருடி தின்ன தூண்டுகிறது. அப்படி உண்டு வயிறும்,  சிறுகுடலும் (இன்டெஸ்டைனும்) நொய்ந்து போகும்.(அகால) மரணத்தை அடைவேண்டி இருக்கிறது.

நாக்குச் சபலம் அதிகரித்துவிடக்கூடாது. நாக்கின் நீளத்தை அறுக்க வேண்டும். பசி எடுத்தால் கண்டதையுமா வயிற்றுள் தள்ளுவது தவறு.

சில அம்மாக்கள், குழந்தைக்கு உடம்பு நல்லதல்லவெனத் தெரிந்தும் கெடுதலான பட்சணங்களை மறைவாகக் கொடுப்பார்கள். டாக்டர் கூடாதென்று தடுத்தவிட்டபோதிலும், மனைவி ரகசியமாக மதுபானம் தருவித்துக் கணவனுக்குத் தருவாள்.

லிவரை கெடுக்கும் சாராயம் போன்றவற்றை அம்பாளின் பேரில் நிவேதனம் செய்து உண்ணாமல், அதற்கு பதிலாக உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவுகளை நிவேதனம் செய்து உண்ணலாம்.

மருந்து

மருந்தினால் நோயைப்போகும் - ஆனால் மரணத்தை விலக்க அதனால் ஆகாது. 

ஆற்றாமை எந்த மருந்தாலும் தீராது.

மருந்து சாப்பிடுவதில் மோகம் இருத்தல் கூடாது. பன்னிரண்டு மாதங்களும் ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பது; இங்கிலீஷ் மருந்து, ஆயுர்வேத மருந்து, யுனானின், கை மருந்து - இப்படிப் பல தினுசு - என மாற்றி மாற்றி சாப்பிடுவது உகந்ததல்ல.

கைவைத்தியம் - இந்த உலகில் எளிதாகக் கிடைக்கும் பொருள். (ஆனால் எவரும் அதற்கு மதிப்பு கொடுப்பதில்லை).

மீட்சி / மீள்தல்

உங்கள் மனத்தில் ஏதாவது மறைவாக இருந்து அந்தத் துர்ச்சிந்தனை உங்களை வாட்டியெடுக்கும் பட்சத்தில், அதனை வெளிப்படையாகச் சொல்லி நிம்மதியுறுங்கள்.

துயருற்றபோதும் மனச் சலனம் இன்றி இருத்தல் வேண்டும். 

நோயாளியிடமே அந்த நோயை எதிர்க்கும் சக்தியிருக்கு. மனிதனுக்குள்ள எண்ணம் பயங்கரமான வேலையைச் செய்யும். இனி நம்பிக்கையில்லை, படுத்துவிடுவோமென்று நினைப்பவரைப் பிழைக்கவைப்பது எளிதல்ல. இந்தச் சாது சந்தியாசிகள் மன உறுதி மிக்கவர் - இவர்களுக்கு அமோக இச்சா சக்தி உண்டு. மரணத்தை நினைத்தபோது இவர்களால் வரவழைத்துக்கொள்ள முடியும். 

நட்பு, தயை, அன்பு இவை அதிகப்படி இருந்தால் ஒருவனை அது விட்டுவிடாது.

நோயில் இருந்து விடுதலையை விரும்பினால் அது வந்தே தீரும். ஆனால் ஒருவனுக்கு இஷ்டமில்லை என்றால் அவனுக்கு அது கிடைக்காது. 

மீட்சிக்கு உதாரணமாக ஜீவன் மஷாயையே சொல்லலாம். டாக்டர் ஜீவன் மஷாயின் தந்தை ஒருதரம் அவருக்கு அறிவுரை கூறுவார். அதன்பிறகு ஜீவன் மஷாயின் மூளையைக் குழப்பிய ஒரு மூடுபனி விலகிப் போயிற்று. ஜீவனின் வாழ்வில் மீண்டும் சுவாலை எழுந்தது. அவருடைய ரிபு-களான மஞ்சரியும், பூபி போஸும் அவர் நினைவிடு மறைந்தனர்.  ஆத்தர்-பௌவும் அவர் நினைவில் இல்லை. புதுப்பிறவி எடுத்தாற்போல் இருந்தது - புதுப் பிறப்பிற்கான தவம். அச்சமயம் ஜீவனுடைய புலனுக்கு ரங்கலால் ஒருவரே புலப்பட்டார். கையில் தடிமனான நோட்டுப் புத்தகம்; கண்ணெதிரே, ஒளிமயமான எதிர்காலம்! அடுத்த நான்கு ஆண்டுகள், ஜீவனதத்தரின் வாழ்க்கையிலே நல்ல உச்சதிசையெனலாம்.

மற்றும்

வெம்மை பற்றினால் எந்தப் பொருளும் வெம்மை கொள்வது இயற்கையின் தருமம். வெம்மையுற்ற பொருள் எதுவும் விரிவடையுமென்பது விஞ்ஞான் உண்மையாகும். அளவுக்கு மீறிய செல்வம் இருக்கும் இடத்தில் அகம்பாவமும் செருக்கும் குடிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

ஜீவன் மஷாயின் தந்தை ’உஹூம் முடியாது’ என்று கூறிவிட்டார் என்றால் அது முடியாது என்று பொருள். ஆனால் அந்த வன்மையில் ஒரு மென்மை கலந்திருந்தது. அவ்வளவு கடினத்திடையேயும் ஒரு மெதுத்தன்மை  ஒலிப்பதுதான் மிக அதிசயம்.

சாஸ்திரம் படிப்பது வேறு, சாஸ்திரஞானம் பெறுவது வேறு - நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன: குரு இல்லாமல் எந்த வித்தையும் வராது. படித்து விடலாம் பல நூல்களை. நெட்டுருவும் போட்டு விடலாம். ஆனால் இந்தப் பயிற்சியுடன் அறிவாற்றலும் இணைந்துவிட்டால் உலகத்துக் காட்சிகளே வேறுவிதமாகத் தோற்றம் கொள்ளும்.

ஜீவனின் குரு ரங்லால் கூறுவார்: ஜீவன், உன்னிடத்தில் எனக்கு ஆசை எதனால் தெரியுமா? நீ வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு மருண்டு போகாதவன் என்பதனால். இந்த நாட்டின் வைத்தியர்கள் தோல்வியை ஏற்று இந்த அலோபதி முறையை வீட்டில் குந்தியபடி சபித்துத் தீர்த்துவிட்டார்கள். இதற்குப் போட்டியாகத் தம் சாஸ்திர ஞானத்தை விருத்தி செய்துகொள்ளவில்லை. வைத்திய முறையில் புதுமையைப் புகுத்தவில்லை. அரைப்பிணங்கள் இப்படித்தான் செத்தொழியும். நீ உயிர் துடிப்புள்ள மனிதன்; அதனாலேயே உன்னிடம் எனக்கு மதிப்பு. தோற்றுப்போவதைவிட அவமானம் தரும் விஷயம் வேறில்லை. தோல்வியை ஏற்பதும் சாவதும் ஒன்றே; செத்தவன் செத்தவனே, புரிகிறதா?

பாவம், புண்ணியம் நிரம்பிய இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் புண்ணியம் செய்யவே விழைகிறான். ஆனால் அவனால் முடிவதில்லை.  சாதாரண மனிதன் பணம் சம்பாத்திக்கிறான், பெயரும் புகழும் ஈட்டுகிறான், ஜோராக செலவும் செய்கிறன். இதை தவிர வேறு எதையும் விரும்பாதவன்.

ஆனால் மனதில் ஒருவனுக்கு திருப்தி ஏற்படவில்லையென்றால் ஒருவன் எப்படி ஆனந்தத்துடன் பொருளீட்டுவார்? புகழால் உண்மையான இன்பம் ஏற்படாது போனால் அது மனத்தைப் பரிபூரணமாக நிரப்பாதுபோனால், அது வெறும் பொய்யே. அதன் ஆயுட்காலம் சில நாளைக்கே. அந்த நாட்கள் சென்றதும் அந்தப் புகழும் பெயரும் வெறும் பொய்யாகிவிடும்!’ பிராந்திக் கோப்பையில் இருக்கும் போதையைப் போல்.

வம்சத்தின் நல்ல பெயரைக் கெடுப்பவன் துரோகியாவான். இதனால் பெற்ற அப்பன், அம்மா இவர்களுக்கெல்லாம் தலையிறக்கமடா... மேலே இருக்கும் பதினான்கு தலைமுறையான பெரியவர்களும் நடுங்குவார்களடா - அந்த மறுமை உலகிலும் இந்த அவமானத்தால் அவர்கள் கண்ணீர் சிந்துவார்களடா’

மரணம் தடுத்தற்கரியது. துயரமோ சோகமோ நிரந்தரமானதன்று. வாழ்க்கையில் அறுசுவையும் கலந்தே இருக்கும். வானிலும், காற்றிலும், இம்மாநிலத்திலும், ஆறு பருவங்களின் நடனம் நிகழ்கிறது. இம்மண்ணின் ஒவ்வோர் அணுவிலும் வெம்மையுடன் வேட்கையும் நிரம்பியிருப்பதுபோலவே உயிரினத்தின் வாழ்க்கையிலும், அதே போல் தேகத்தின் புரைகளிலும் இந்த வேட்கையும் சுவைபற்றிய நசையும் தேங்கியுள்ளன. இவை இராதுபோனால் வாழவே முடியாது - மனிதனின் உள்ளத்துள் ஆனந்தத்தைப் பெற வேண்டிய தாகம் இருக்கிறது. சோகம் என்பது எதற்காக? அது ஏன் நீடிக்கவேண்டும்? 

வருங்காலம்

மரணத்தை வென்று வரவே முடியாது;  ஆனால் அகால மரணத்தைப் காட்டிலும் துக்ககரமானது வேறெதுவுமில்லை. அகால மரணத்தைத் தடுப்பதே இந்த உலகில் மங்களமான காரியமாகும். எல்லாவற்றையும்விட இன்பம் தருவதாகும்.

மனிதன் அகால மரணத்தை வென்று வரலாம்; நிச்சயமாக அவனால் முடியும். நோய்களிலிருந்து அவன் மீட்சி தருவான். நல்ல பழுத்த வயதில் யோகியரைப்போல், தவசிகளைப்போல் மனிதன் ஒவ்வொருவனுக்கும் உடம்பை நீத்துச் செல்வான். அப்போது சிகிச்சர்களுக்கோ, டாக்டர்களுக்கோ தேவையிராது. நல்ல பக்குவ வயதில் ஆரோக்கியமான உடலுடன் மனிதர் யோகியரைப்போல், தவசிகளைபோல் உடலை நீத்துச் செல்வார்கள். வைத்தியனை விளித்து, ‘இனித் தேவையில்லை; போதும். ஓய்வுவேண்டும் - நான் தூங்கவேண்டும் புட் மீ டு ஸ்லீப் ப்ளீஸ் (Put me to sleep please) என்பார்கள். அது ஒரு பெருந்துயில் - மகாநித்திரை!

நன்றி ஜெ.

அன்புடன்

ராஜேஷ்

பி.கு: இந்நாவலை ஓர் ஆண்டாக நான்கு பிரபலாமன நூல்விற்பனை வலைத்தளங்களில் order செய்தும், பின்பு stock இல்லை என பதில்பெற்றேன். ஒருவழியாக நண்பரின் உதவியால் 2022 சென்னை புத்தககண்காட்சியில், சாஹித்திய அகேடமியின் 2020 வெளியிட்ட மூன்றாம் பதிப்பை பெற்றேன். ஆனால் இப்பதிப்பு நாவலின் வாசிப்பு அனுபவத்தை குளைத்துவிட்டது என்றே சொல்லலாம். 

ஒவ்வொரு பக்கத்திற்கும் சராசரியாக 1-2 பிழைகள். ஒற்றெழுத்து பிழைகள், வலிமிகும் மிகா பிழைகளை விட கண்ணுக்கு அப்பட்டமாக தெரியும் பிழைகளில் 90% தட்டச்சு பிழைகள் தான். உதாரணமாக ஆணடு (ஆண்டு), ஏதவது (ஏதாவது), அவவ்றையில் (அவ்வறையில்), தேற்றுப் (தோற்று), அநத்த் (அந்தத்), உணமை (உண்மை), இபபடி (இப்படி)... இந்த பதிப்பு Draft 2 என்றுக்கூட சொல்ல முடியாது அளவில் தட்டச்சுப்பிழைக்ள் நிரம்பியிருக்கின்றன. ஆனால், இது மூன்றாவது பதிப்பு என்று சொல்வது நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் 2015 பதிப்பை பற்றி வலைத்தளங்களில் பதிவுகள் உள்ளன. சாஹித்திய அகேடமியின் இ-மெயில் எழுதி ஒருவாரம் ஆகிறது. இதுவரை ஒரு பதிலும் இல்லை.

இந்நூலை படித்தப்பின்பு, அழிசி குழு சமீபத்தில் கிண்டிலில் வெளியிட்டுள்ள பதிப்பை (சொடுக்கை தட்டவும்) நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Paperback வடிவில் வேண்டும் என்றால் வ.உ.சி நூலகம்/பதிப்பகம் வெளியிட்டுள்ள பதிப்பு (சொடுக்கை தட்டவும்) கிடைத்தால் வாங்கலாம். சாஹித்திய அகேடமியின் (2022 வரையிலான) பதிப்பை தவிற்பது நல்லது. (2022 ஜுலை-22 எழுதியது இக்கட்டுரை)

 


April 07, 2021

மண்ணில் உப்பானவர்கள்


கடந்த 3 நாட்களாக சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய ”மண்ணில் உப்பானவர்கள்” என்ற புத்தகத்தை வாசித்தேன். இப்புத்தகம் உப்பு சத்தியாகிரஹம் என்னும் மகத்தான யாத்திரையை பற்றியது. விடுதலை நோக்கிய பயணத்தை பற்றிய புத்தகம்.

இப்புத்தகத்தில் பல தளபதிகளின் வாயிலாக இந்திய விடுதலை நோக்கிய இப்பயணம் முழுவதும் காந்தி வருகிறார். அது அவருடைய மகத்தான ஆளுமையை காட்டுகிறது. காந்தியை ஏக கதாநாயகனாக காண்பிக்காவிட்டாலும், பல எளியோர்களும் தலைவர்களும் இதன் நாயகர்களானாலும், இவர்களை விடுதலை நோக்கிப் பயணம் செய்ய வைத்ததில் காந்திக்கு மிக பெரிய பங்கு உண்டு என்பதை இப்புத்தகம் முழுக்க  நேரடியாக காணலாம்.

இன்றைய காலகட்டங்களில் ஒரு நாள் நடைபெறுகின்ற அரசியல் பேரணிக்கு சில பல கோடி ரூபாய்களில் பணத்தை செலவு செய்கின்றனர். அனைத்தும் ஆதாய நோக்கோடு மட்டுமே. ஆனால் 80 ஆண்டுகள் முன்பு தகவல்தொடர்பு வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலக்கட்டங்களில் எளியோர்களை தாமகவே முன்வந்து இப்போராட்டத்தில் பங்கேற்க மனதில் எழுச்சியை உருவாக்க விதையை விதைத்தவர் காந்தி. மிக எளிமையாக நடந்த போராட்டம்.

வழி நெடுக்கிலும் நான் கண்டவை/ கற்றவை/ பெற்றவை

1) இப்படிப்பட்ட மிகப்பெரிய போராட்டத்திற்கு தேவை ஒழுக்கமும் மனதிடமும் அச்சமின்மையும் சுயகட்டுப்பாடும். அதற்கு தகுதியானவர்களை பல வாரங்கள் ஆசிரமத்தில் தயார் செய்கிறார் காந்தி. இவர்களுக்கு ஒரு நாளில் பின்பற்ற வேண்டிய பணிகள் பற்றி ஒரு தெளிவான அட்டவனை / திட்டம் உண்டு.   காலை 4 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு உறங்குவது வரை. சத்தியாகிரஹிகள் தினமும் நாட்குறிப்பு எழுதவேண்டும் என்று கூறுகிறார்.

2) உணவு, உடை, தங்குமிடம் மிக எளிமையாக இருத்தல் வேண்டும். அவற்றை செல்லும் வழியில் மக்கள் கொடுப்பதில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். எளிமையை கடைப்பிடிக்க வேண்டும்

3) காந்தி ஒரு ஊருக்கு செல்வதற்கு முன்பாக ஒரு குழு (விடியலின் படை) சில மணி நேரம் முன்பே சென்று தங்குவதற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்யும்

4) காந்தி கைது செய்துபட்டால் போராட்டத்தை தொடர அடுத்தகட்ட தலைவர்களை காந்தி கண்டைந்து அவர்களை போராட்டத்தை வழிநடத்த கூறியுள்ளார்

5) முதலில் உப்பு சத்தியாகிரஹப் போராட்டத்தை யாரும் பெரிதா எடுத்தகொள்ளவில்லை என்றாலும் இப்போராட்டத்தின் பிரமாண்டத்தை காந்தி திடமாக நம்பினார்

6) மற்றவர்களை விட ஓய்வின்றி அதிகம் உழைத்தவர் காந்தி. கடிதங்கள், கட்டுரைகளை, நேர்காணல்கள், உரையாடல்கள், பேச்சு என காந்தி நாள் முழுவதும் ஒரு நோடிக்கூட வீண் செய்யாமல் உழைத்திருக்கிறார்.

7) வழி நெடுக்கில் தீண்டாமை, சாதிய பாகுபாடு ஆகியவற்றை கறாராக கண்டிக்க காந்தி ஒரு போதும் தயங்கவில்லை. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை என்பது அதிகார மாற்றம் அல்ல. மக்களுக்கு கிடைக்கும் சுதந்திரமும் சுயமரியாதையும் தான் உண்மையான விடுதலை என்கிறார். தீண்டாமை ஒழிக்காமல் விடுதலை பெற்று ஒரு பயனும் இல்லை என்கிறார்.

8) போராட்டத்தில் பெண்களின் பங்கு மிக அவசியம் என கருதிகிறார் காந்தி. 

9) அரசாங்கத்திற்கு அனைத்தையும் அறிவித்துவிட்டே செய்கிறார்.

10) இப்பொழுது தேவை ஒத்துழையாமையே என்பது காந்தி அளித்த செய்தி. மக்கள் ஒத்துழையாத பொழுது அரசுகள் அதிகாரம் செய்ய முடியாது என்று திடமாக நம்பினார். அதனை மற்றவர்களும் உணரும் படி செய்தார்.

11) தண்டி போன்ற சிறு கிராமம் பலரின் வருகையை தாக்குபிடிக்காது. ஆதலால் அனைவரும் அவரவர் உணவு இருப்பிடத்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார்

12) ஒரு பிடி மண் என்றாலும் அதில் தான் இத்தேசத்தின் கௌரவும் உள்ளது என்ற செய்தியை எல்லார் மனதிலும் கடத்துகிறார்

13) இந்த யாத்திரை எளியோர்களால் ஆனது. நகரங்களும் தார் சாலை வழிகளும் அல்லாமல் கிராமங்கள் மூலம் மட்டுமே காந்தி பயணித்து இருக்கிறார். அவ்வாறே கடைக்கோடி எளியோரையும் தன் செய்தியின் மூலமாக சென்றுஅடைகிறார் காந்தி.

14)  பல செல்வந்தர்கள் தங்களது வசதிகளை சொத்துகளை துறந்து காந்திய கொள்கையை பின்பற்றி எளிய வாழ்கையை மேற்கொண்டு இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 

15) வயதையும் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் பலர் ஒவ்வொருநாளும் 15 முதல் 25 கிலோமீட்டர் தூரம் வரை நடந்துள்ளனர். 

16) உறவுகளை பேணுவதில் காந்திக்கு நிகர் காந்தியே. அதனால் தான் அவருடன் நூற்றுக்கணக்கான தளபதிகள். காந்திய பண்புகள் இருந்தாலும் அவரவருக்கு தனி அளுமைகள் உண்டு. 

17) சர்வதேச ஊடங்களுடன் காந்தியின் தரப்பையும் இந்தியாவின் தரப்பையும் முன்வைக்க சிறந்த ஊடகியவியலாளர்களை தேர்ந்தெடுத்து அப்பொறுப்பை அவர்களிடம் அளிக்கிறார் காந்தி.

18) எத்தகைய நிலையிலும் சமநிலை குலையாமல் இருக்கிறார் காந்தி

19) எல்லா வாரமும் திங்கட்கிழமை அன்று அவருடைய மௌனவிரதத்தை கடைப்பிடிக்கிறார். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் இரண்டு நாட்கள் மௌன விரதமும் உபவாசமும் இருக்கிறார் காந்தி. அவ்வாறே ஒரு போராட்டத்திற்கு மனதளவிலும் உடலளவிலும் தயாராகிறார் காந்தி.

20) உப்புச் சட்டத்தை மீறவேண்டியதின் அவசியத்தை செல்லுமிடமெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார் காந்தி

21) நேரம் தவறாது செயல்களை திட்டமிட்டபடி செய்பவர் காந்தி.

22) கூட்டம் கூடினால் மட்டும் போதாது மக்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறார் காந்தி

23) ஆடம்பரமாக நடைப்பெறவேண்டிய போராட்டம் அல்ல இது. இந்த விடுதலை எளியவர்களுக்கானது.  மிக மிக எளிமையாக நடைபெற வேண்டியது. வல்லரசு கனவுகள் இல்லை ஏனெனில் இத்தேசம் எளியவர்களுக்கானது என்பதை தன் உடன் இருப்போருடன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். மக்கள் தாமாகவே வந்து பங்கேற்கும் போராட்டமே வெற்றி பெறும் என்று நம்பினார் காந்தி.

24) சுதந்திர கணலை மக்களின் மனதில் மூட்டிக்கொண்டே இருந்தவர் காந்தி

25) உப்பையும், நூற்று செய்த கதர் ஆடைகளை பலர் விற்று இப்போராட்டத்திற்கு பணம் சேர்த்துக்கொடுத்துள்ளனர். ஆனால் பணத்தை விட மக்களின் பங்கேற்ப்பே மிக அவசியம் என்று காந்தி கருதுகிறார்.

26) ஒவ்வொரு ஊரின் வழியாக செல்லும் பொழுதும் ஆங்கிலேயர்கள் கிராமத்துமக்களுக்கு கடுமையான உத்தரவுகளை போடுகிறது. ஆனால் கிராமத்து மக்கள் போராட்டத்திற்கும் தண்ணீரும் உணவும் தங்குமிடமும் கொடுத்து தங்கள் ஆதரவை தந்துக்கொண்டே இருக்கிறார்கள்

27) உப்பு சத்தியாகிரஹம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. அதுவே காந்தியின் வெற்றி. 

28) முக்காடு போட்டுக்கொண்டு வீட்டை தாண்டாத பெண்கள் கூட இப்போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர்

29) உப்பு சத்தியாகிறத்தை முதலில் இருந்து நம்பியவர் இராஜாஜி. வேதாரண்யத்தில் இராஜாஜி உப்பு சத்தியாகிரஹத்தை தலைமையேற்று நடத்தினார். அதற்கு பலரை கறாரான முறையில் நேர்காணல்கள் வைத்து தேர்வு செய்து நடத்தினார். 

30) எண்ணற்ற எளியோர்களும் பல தலைவர்களின் பங்கேற்பே இப்போராட்டத்தை வழி நடத்தியது.

உப்பு சத்தியாகிரஹம் துவங்கியப் பிறகு புதிய இந்தியா பிறந்தது எனலாம். அதில் சுதந்திரத்தின் கணலை வளர்த்து அதனை தொடர்ந்து பாதுகாத்தார் காந்தி. தன்னலமற்ற பலரின் தியாகத்தாலும் பெருஞ்செயல்களாலும் கிடைத்து இந்தச் சுதந்திரம். அதனை இப்புத்தகம் வாசிக்கும் தோறும் உணர்ந்தேன். அத்தகைய உணர்வை தன் எழுத்தில் மூலம் சாத்தியப்படுத்திய சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றிகள் பல.

சீரான Tone-இல் அழகிய தரமான  புகைப்படங்களுடன் இப்புத்தகம் பதிப்பித்த தன்னறம் நூல்வெளி (பதிப்பகத்திற்கு) பாராட்டுக்கள். பெரும்பாலான தலைவர்களின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே சென்றது ஒரு தனி வாசிப்பு அனுபவத்தை தந்தது.

அனைவரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான புத்தகம்.

October 25, 2020

பொய்த்தேவு - க.நா.சுப்ரமண்யம்

 பொய்த்தேவு  - க.நா.சுப்ரமண்யம்


எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் எழுதிய பொய்த்தேவு (அதாவது பொய்த் தெய்வம்) என்னும் இந்நாவலை நான் இருநாட்களில் (மொத்தமாக 8 மணி நேரத்தில்) வாசித்தேன். இதை எதற்கு சொல்கிறேன்? எளிமையான சரளமான நாவல். ஆனால் மிக நல்ல நாவல். சோமு என்ற பொடிப் பயல் எப்படி சோமு முதலி ஆகி சோமு பண்டாரமாக இறக்கிறான். இந்நாவலில் சோமுவின் வாழ்க்கைப் பயணத்தின் சில பக்கங்களின் மூலமாக வாழ்வின் பற்பல தளங்களையும் பல மனிதர்களின் குணாதிசியங்களையும் தொட்டுச் செல்கிறார் க.நா.சு. 

முதல் அத்தியாயமே சோமு பிறக்கும் மேட்டுத் தெருவை பற்றி. இம்மேட்டுத் தெருவில் உள்ளோர் பெரும்பாலும் இழிந்தோர்கள் எனலாம். சிலர் நாணயமான வேலையில் நம்பிக்கை இல்லாதவர்கள். சில இரவுகள் ஈன்றிவிட்டுப் போதுமென்ற மனசுடன் மறு சந்தர்ப்பம் வாய்க்கும் வரையில் காத்திருப்பார்கள். சிலர் எதுவும் செய்யாமல் பிறர் காரியங்களில் தலையிட்டு தரகு அடித்துப் பிழைப்பார்கள். வேலை செய்யாமலும் பிழைக்காமலும் நடைப் பிணங்களாகவே நடமாடித் திரியும் ஜந்துக்களுக்கும் இம்மேட்டுத்தெருவிலே குறைவில்லை. 

அத்தகைய மேட்டுத் தெருவிலே தான் சோமு பிறக்கிறான். அவன் வளர்ந்து பெரியாளாகி பணக்காரணாகியும் இறுதிவரையில் அத்தெருவைவிட்டு அவன் வெளியே வரவேயில்லை. அது அவனது மனதை காண்பிக்கிறது. அவன் அறிவு வளர்ந்தாலும் அவன் ஞானம் வளரவே இல்லை. அவன் இழிவாகவே உள்ளான் என்று. 

பிறரை உடல் வலிமையால் அதட்டி பிழைத்து வாழும் கறுப்புக்கும் வள்ளியமைக்கும் பிறந்தவன் சோமு பயல் . ஆனால் அவர்கள் பெற்றோர்கள் திருமணம் செய்துக்கொண்டவர்கள் அல்ல. அது ஒருவித தகாத உறவு. சோமுவின் மிக இளம் வயதிலேயே அவன் தந்தை கறுப்பு இறக்கிறான். பின்பு சோமு “கறுப்பு மகன்” என்னும் சமூகத்தின் அடையாளப்படுத்தலால் வளர்கிறான். சிலர் அவனை “அப்பனைப் போல் இல்லாமல், நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே!” என்கிறார்கள். அந்த வார்த்தைகள் அவன் ஆயுள் பூராவுமே ரீங்காரமிட்டன. 

சோமு முதலியின் குழந்தைப் பருவ ஞாபங்களில் இருப்பது கோயில் மணி ஓசை, ஒளி, புயல். ஆனால் அக்கோயில் மணியின் ஓசையை அவன் இறுதியில் மட்டுமே கேட்கிறான். இடையில் எத்தனை முறை கோயில் மணி அடித்தாலும் அவன் ஆழ் மனதில் அது கேட்கவே இல்லை. இதுப்போல் பலருக்கு வாழ்வில் பலதடவை ஆத்ம சக்தி ஓங்கினாலும் (குறிப்பாக தவறு செய்யும் பொழுது மனசாட்சி அதனை தடுத்தாலும்) அதனை கேட்க மாட்டார்கள். அதனால் தான் என்னவோ பலரின் ஆத்ம சக்தி குறைந்துக்கொண்டே இருக்கிறது. 

சாத்தனூர் கோவில் விக்கிரங்களைவிட கோயில் மணி ஓசை சோமுவை கவர்ந்தது என்பதில் ஆச்சர்யம் இல்லை. வெறும் உலோகத்தை உருக்கி வார்த்து அந்த மாதிரி இனிய நாதம் எழுப்பும் சக்தியை அதற்குக் கொடுத்தவன் உண்மையிலேயே ஒரு கலைஞாகத்தான் இருக்கவேண்டும். அது தனி இசை; உள்ளத்தைக் கவர்ந்து உயிரையே உருகி ஓடச் செய்யும் இசை; மனிதனின் ஆத்மாவைக் கவ்வி இழுத்துக் கடவுளின் பாதாரவிந்தங்களில் பணியச் செய்வதற்கு என்று ஏற்பட்ட இசை.” என்று க.நா.சு சொல்கிறார். இக்கோவில் மணியை நமது ஆத்மாகவா நாம் உருவகிக்கலாம். நமது ஆத்மாவை நாம் ஒரு கலைஞாகவே இருந்து உருவாக்கவேண்டும். ஒரு கலைஞன் அவன் கலையில் தேர்ச்சிப் பெற அவன் எவ்வளவு உழைக்கவேண்டும். எவ்வளவற்றை விட வேண்டும். அப்பொழுது தான் அவன் கலை அவனுக்கு கைக்கூடும். அதுப்போல தான் ஒருவனின் ஆத்ம பலம். ஒருநாளில் வார்ப்பது அல்ல. 

சோமு மேட்டுச்தெருவிலேயே அலைந்து திரிந்து வளர்வதைக் கண்ட சோமுவின் அம்மா வள்ளியம்மை அவனை அவ்வூர் மிராசுதாரர் ரங்கா ராயரிடம் சேர்த்துவிடுகிறாள். ரங்கா ராயரிடம் கூடமாட ஒத்தாசை செய்து வேலையாளாக இருக்கிறான் சோமு. ரங்கா பல நன்மைகள் செய்து ஊரில் நற்பெயர் வாங்கினாலும் ரங்காவிடம் சோமு ”காண்பது” பணத்தின் மதிப்பை மட்டுமே. ஒரு 10 ரூபாய் வைத்துக்கொண்டு சாத்தனூர் கிராமத்தையே வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அடைவது வரை எது நீடிக்கிறதோ அதுவே ஆசை. மற்றவை எல்லாம் நீராவி போன்ற கற்பனைகள் எனலாம். சோமு ஆசைகளை கொண்டவன். ஏக்கங்கள் கொண்டவன். அதற்காக உழைப்பவன். ரங்காவிடம் அவன் கண்ட பணமே அவனது லட்சியம் என்று கூறுவது மிகையாகது. சோமு வளர்ந்து பெரியாள் ஆகி பணத்தை அளவில்லாது சம்பாதிக்கிறான். 

சோமு வளரும் பொழுது ரங்கா அவனிடம் சிதம்பரம் என்னும் குதிரை ஓட்டியிடம் சகவாசம் வைத்துக்கொள்ளதே என்று கூறுகிறார். ஏனெனில் அவன் ஒரு உதாவாக்கரை. நீயும் அப்படி ஆகாதே என்று. ஆனால் சோமு ரகசியமாக சிதம்பரத்துடன் சிநேகம் வைத்துக்கொள்கிறான். சிறு வயதில் ஆரம்பித்த இந்த ரகசிய வாக்கு மீறல் அவன் வாழ்நாளில் இறுதிவரை வெவ்வேறு வடிவில் தொடர்கிறது. அவன் குடி, கூத்தியாள், அளவு மீறும் பாலியல் கற்பனைகள் என்று அவன் சீர்க்கெடும் பல இடங்கள் அவனை பொருத்த அளவில் ரகசியம் (கிணத்துக்குள்ள குசு விட்டால் வெளியே தெரியாது என்பது போன்ற ரகசியம்). ஏனெனில் இவனுடைய வீடுகட்டும் ரகசியத்தைப் பற்றி ரங்காச்சாரியார் தீடீர் என்று அவனிடம் கேட்டுவிடுவார். அதேப்போல் சோமுவின் கள்ள உறவுகளை இவ்வூர் மக்கள் பார்த்துக்கொண்டே இருப்பர். பின்னே ஏசுவர். குறிப்பாக இறுதியில் சோமுவின் ஆசிரியர் சுப்ரமணியரின் பேரன் சாமா (சுவாமிநாதன்) சாம்பமூர்த்தி இறந்துவிட்டார் என்ற செய்தியை சொன்ன உடன் அடுத்ததாக என்னைப்போன்றவருக்கு கோமளவிலாஸில் (அதன் கிரஹ ப்ரவேசத்தில்) என்ன வேலை இருக்க போகிறது? என்னைப்போன்றோர் வந்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பான். அவ்வார்த்தையில் உடைந்துவிடுவான் சோமு என்று சொன்னால் மிகையாகது. ஏனெனில் அவனின் பணம் அவனுடைய வெற்றியாக கருதும் பங்களாவை ஆதம்பலம் கொண்ட சாமா போன்றோர் அதை துச்சமாக கருதுகிறார்கள். அப்பொழுது அவனுக்கு மணி ஓசை கேட்கும். குழந்தை காலத்துக்கு பிறகு நடுவில் பல ஆண்டுகள் (அவன் ஆத்ம சக்தி)யின் மணி ஓசை அடித்தாலும் அதனை சோமு கேட்கவே இல்லை. ஏனெனில் இது அறவழியில் வந்த சாமா போன்றவரிடம் இருந்து வரும் ஓசை. அதுவே ஆத்ம சக்தியின் வலிமை எனலாம். 

அதேப்போல் சோமுவின் இளமைப்பருவம் அவன் வாழ்நாள் எல்லாம் தாக்கம் செலுத்தும் என்பதற்கு உதாரணம் - சோமு தைரியமாக நீதிபதியிடம் சென்று போலிஸை அழைத்து வந்து அவனது எஜமான் ரங்கா ராயரை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான். இந்த மனதிடம் அவனை எக்காரியத்தை செய்து முடிப்பவன் என்பதற்கு உதாரணம். ஏனெனில் பிந்நாளில் அந்த ஊருக்கு ரயில் ஸ்டேஷன் வர காரணமாக இருக்கிறான். எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றிப் பெறுகிறான். 

”மனிதனுடைய ஞாபகம், மனசு ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. இப்படிப் பிடித்துக்கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது. முக்கியம், முக்கியம் அல்லாதது என்பது பற்றியெல்லாம் கவலை படுவதே இல்லை இந்த மனசு. ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டால் ஆயுசு பூராவும் நழுவ விடவே விடாமல் வைத்துக் காப்பாறியும் தருகிறது. அதுவே மனசின் கிறுக்கு” என்று க.நா.சு சொல்கிறார். அதனால் தான் என்னவோ சோமு பணத்தை பெற்று வாழ்வில் மற்றவற்றை கோட்டைவிட்டான் என்று சொல்லவேண்டும். குறிப்பாக அவன் ஆத்ம சக்தியை.

பல தெய்வங்கள் உண்டு. பணம், ஆசைகள், சிந்தனைகள், உதவி, உழைப்பு. ஆனால் சோமு பணம் என்னும் ஒரே தெய்வத்தை மட்டுமே கண்டான். அதற்காக திட்டமிட்டு உழைத்தான். கல்வி கற்றான், தொழிலை சுத்தமாக சீரும் சிறப்புமாக செய்தான். அவன் மளிகை கடை வைத்தாலும் தரம் வாய்ந்த பொருள்களை வாங்கினான். அமேரிக்க வியாபார யுக்திகளை மாத இதழ்கள் (magazine) மூலம் கற்று தன் வியாபரத்தை பெறுக்கினான். பல தொழில்கள் செய்தான் - இன்சூரன்ஸ், மெர்சண்ட் என்று பல தொழில்களை செய்தான். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். உழைத்தால் மட்டும் பணம் ஈட்டமுடியும் என்று நம்பி திட்டமிட்டு உழைத்தான். ஆடம்பரமாக செலவு செய்யவே மாட்டான். கம்பனியிடம் இருந்து சோமு ஒரு கார் வாங்கினான். ஆனால் அதன் செலவு, பெட்ரோல் என எல்லாம் கம்பெனி செலவில் வந்தன. இவனோ அக்காரில் இன்சூரன்ஸ் தொழில் செய்து சம்பாதித்தான். இவனை பார்த்து கார் வாங்கிய மற்ற ஊர் பணக்கார்கள் காருக்கு செலவு மட்டுமே செய்தார்கள். சோமு பணம் சம்பந்தமான எதுவாக இருந்தாலும் அதில் சூரப்புலியாக செயல்பட்டான்.

உழைப்பை நம்பிய சோமு எவ்வளவு சம்பாத்திதாலும் என்றும் ஒரு பிடி அளவு நிலத்தை கூட வாங்கியது இல்லை. ஏனெனில் வெறும் நிலத்தை வாங்கி அது காசு கொடுக்கும் என்று நம்புவோர் போன்று சோமு நம்பவில்லை. ஏனெனில் பலர் நிலத்தை வாங்கி வைத்துவிட்டு அதுனை உழாமல் நாளைக்கே அது வளர்ந்து பொன் தரவேண்டும் என்று நினைக்கின்றனர். உழைக்க தயாராக இல்லை. பிறர் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்று அக்கறைக்கொள்கின்றனர் அந்த சோம்பேறிகள். 

ஆனால் இவ்வளவு உழைக்கும் சோமு தன் சிந்தனைகளை எல்லாம் பணத்தில் குவித்து இருக்கும் சோமு கோட்டை விட்டது ஆத்ம பலத்தில். ஏனெனில் இவன் வாலிபனாக இருக்கும் பொழுது அளவு கடந்த காம கற்பனைகளிலும், கூத்தியாள் சகவாசங்களிலும் திரிந்தான். ஆனால் பின்பு உழைப்பின் பக்கம் வந்தாலும் அவன் இரகசியமாக மறுபடியும் கூத்தியாள்களிடமே செல்கிறான். ஆனால் இதற்கு நேர் எதிராக க.நா.சு ரங்கா ராவையும் அவரதும் மாப்பிள்ளை சாம்பமுர்த்தியையும் காண்பிக்கிறார். ரங்கா ராவ் ஒரு சொத்து வழக்கில் தோற்றாலும் மனம்விடாது உயர்நீதிமன்றத்தில் போராடி வெற்றிப் பெறுகிறார். அதேப்போல் சாம்பமூர்த்தி அவன் மனைவி கங்காபாய் இறந்தப் பிறகு தனது பணத்தை எல்லாம் தீர்த்தப் பிறகு கூத்தியாளிடம் சென்று தவறு செய்கிறான். ஆனால் அவன் ஆத்மபலம் அவனை ஒரு வினாடியில் துவக்கத்திலேயே காப்பாற்றிவிடுகிறது. அவனை நல்வழிப்படுத்தி மறுபடியும் கோயில் பூஜை சேவை என்று ஈடுபடவைக்கிறது. ஏன் சாம்பமூர்த்தியின் ஆத்ம பலம் அதிமாக இருந்தது என்றால் அவன் பூஜை, சேவை, என்று மனதை நல்வழிப்படுத்தினான். நேர்மையாக இருந்தான். பொருளின் மீது மயக்கம் கொள்ளவில்லை. மேலும் தர்மம் தலைக்காக்கும் என்பதுப்போல், அவன் மகன் சுப்ரமணியம் நன்கு படித்து நல்ல ஒரு வியாபாரத்தை துவங்குவான்.

ஆனால் சோமு முதலி அப்படி அல்ல.  சாம்பமூர்த்திக்கு இருந்த ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான். சோமுவுக்கு பணம் ஒன்றே பிராதனம். அதனால் தான் அவனால் ஆத்ம சக்தியை வளர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவன் எவ்வளவு பணம் சம்பாத்தித்தும் பூரண மனிதன் ஆகவில்லையே என்று சோமு வருந்தினான். புண்ணியத்தையும் சம்பாத்திக்கவில்லை. சோமுவின் மகன் நடராஜன் சீர்கேட்டு உதவாக்கரையாக வளர்வான்.

சோமு தவறு செய்யும் பொழுது எல்லாம் “கறுப்பு முதலி பையன் கறுப்பு மாதிரி தான் இருப்பான்” என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுத்துக்கொண்டே இருக்கின்றன. இவ்வூரும் இரக்கமற்று அதையே நினைவூட்டுகிறது. ஏனெனில் அது அவன் பால்யத்திலும் வாலிபத்திலும் அவன் மனதில் கொண்ட தவறான எண்ணங்களால் விளைந்தவை. 

ரங்கா ராவ் மீது தவறுகள் உண்டு. அவர் ஆடம்பரமாக கல்யாணத்தை கடன் வாங்கி செய்தார். அதன் விளைவாக வட்டியும் கடனும் கட்ட அவர் செல்வத்திலும் நிலம் போன்ற ஆஸ்திகளை விற்று இழந்தார். ரங்கா ராவும் சரி சாம்பமூர்த்தியும் சரி தங்கள் பரம்பரை சொத்தை விற்று தானம் செய்தார்கள். ஆனால் அது தவறு. இவற்றையெல்லாம் அவர்கள் துவக்கத்திலேயே திருத்தி இருக்க வேண்டும். ஒரு திட்டத்துடன் இறங்கி இருக்க வேண்டும். வரும் பொழுது பார்த்துக்கொள்ளலம் என்பதெல்லாம் தவறு. போகும் இடம் தெரியாதவன் எந்த ஒரு ஊருக்கும் போய் சேர மாட்டான். ரங்காவும் சாம்பமூர்த்தியும் தங்களது சொத்துக்களை விருத்தி செய்து இருக்கவேண்டும். வரும் இலாபத்தில் இருந்து தானங்களையும் சேவைகளையும் செய்து இருக்க வேண்டும். அதுவே நல்ல ஒரு ஏற்பாடு. அவர்கள் பொருளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. இறுதியில் பொருள் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

மேட்டுத் தெருல பிறந்த சோமு கடைசி வரைக்கும் அங்கேயே இருக்கான். ஏன்னா அவன் ஆத்மா சக்தி ஓங்கவில்லை என்பதே காரணம். ஏன் ஆத்ம சக்தி ஓங்கவில்லை? அவன் பணம் சம்பாத்தித்தான். ஆனால் அவன் கீழ்மைகளை உதரவில்லை அறுக்கவுமில்லை. அவன் கீழ்மைகள் அவனுள் ஆழமாக இருந்தது. சமயம் பார்த்து அவனை வஞ்சித்தது (வாலிபம் திரும்பி பெண்களிடம் சென்றான். தன் மதிப்பை குறைத்துக்கொண்டான்). கீழ்மையில் இருப்பதை உணரவில்லை. சாக்கடைப் போன்ற மேட்டுத் தெருவும் கீழ்மையின் சின்னம் என்பதை உணரவில்லை. அதனால் தான் அவன் மேட்டுத் தெருவிலேயே இருந்துவிட்டான். அது ஒரு குறியீடு. சொல்லப்போனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தப் பிறகு வேறு ஏதோ ஒரு சாத்தனூர் கிராமத்தில் இறக்கிறான். அவ்வூரிலும் மேட்டுத் தெரு இருக்கிறது.

அதனால் மனிதன் அவ்வப்போது சிந்திக்க வேண்டும். அதற்கு அவகாசமும் வேண்டும். இரண்டும் வேண்டும். சிந்திப்பதை தொடர்ந்து செய்யவேண்டும். ஆனால் சிந்தனையுடன் நிறுத்திவிடக் கூடாது. செயலில் தன் சிந்தனையை காண்பிக்க வேண்டும். அதுவே அவனை நல்வழிப்படுத்தும். அவன் ஆத்ம பலத்தைக் கூட்டும். 

எல்லோரும் தவறு செய்வது ஒரு நொடியில். அந்த ஒரு நொடியை கடக்க சிந்திக்க வேண்டும். 

உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வமும் உண்டு - இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாஅடிக்கொரு தெய்வம் உண்டு” என்று சோமு பண்டாரம் சொல்வதாக க.நா.சு சொல்கிறார். இதன் உள்ளார்ந்த அர்த்தம் பணம் (மட்டுமே) தெய்வம் அல்ல. சொல்லப்போனால் பணம் ஒரு பொய்த்தேவு / பொய்யான தெய்வம். பணம் இருந்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்னும் மாயம் கொண்ட தெய்வம். வாழ்வில் மற்ற முக்கியமான தெய்வங்கள் உண்டு. அதனால் தான் நாவலின் கடைசியில் சாமா சொல்கிறான் சோமு போன்ற உழைப்பால் முன்னேறிய பணக்காரர்கள் இவ்வுலகிற்கு வேண்டாம், ஏனெனில் இவர்கள் ஒரு விதத்தில் பணக்காரர்களாக இருந்தாலும் பல முக்கியமான விஷயங்களில் ஏழையாகவே இருக்கிறார்கள். குறிப்பாக கீழ்மைகளை கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்வுலகிற்கு சாம்பமூர்த்திப் போன்ற ஆசாமிகள் தான் தேவை ஏனெனில் அவரிடம் செல்வம் குறைந்தாலும் குணம் குறையவில்லை. அவரிடம் ஆத்மபலம் அதிகமாகவே இருந்தது. அவரைப்போன்றோர் செயலாற்ற வேண்டும்.

============================================

மேலும் - நாவலில் இருந்து சில பத்திகள்

ஏழைகளாகப் பிறந்து பசி தாகத்தைப் பரிபூரணமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே உள்ளத்திலே எண்ணிறந்த அற்புதமான கனவுகள் நிறைந்திருப்பதற்கும், பணக்காரர்களாகப் பிறந்து விட்டவர்களுக்கு ஒரு திருப்தி, வயிறு நிறைந்த தன்மை, சோம்பல், தூக்கம் இவை தவிர வாழ்க்கையிலே வேறு ஒன்றுமே இல்லாதிருப்பதற்கும் பொதுவாக இதுதான் காரணம் போலும்! பசியையும் தாகத்தையும் தலை தூக்க விடாமல் வயிற்றை நிரப்பிக்கொண்டு வளர்ந்து பெரியவர்களாகி விட்டவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதன் மகிமைகள் பூராவும் நிச்சய்மாக தெரியது என்று தைரியமாகவே சொல்லலாம்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு வினாடியுமே முக்கியமானதுதான் - அற்புதமானது தான் - முடிவற்றதுதான்!

ஒரு மனிதனுடைய ஆசைகள் ஒரே வினாடியில் பூர்த்தியாகி விடுகின்றன. இன்னொருவனுடைய ஆசைகள் ஏழேழு தலை முறைக்கும் பூர்த்தியாக மாட்டாதவை என்று அதே வினாடியில் தெரிகிறது. ஆமாம், ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆசைகளே இல்லாத மனிதர்களும் இருந்து, வாழ்ந்து வினாடிக்குப் பின் வினாடியாகக் கழித்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இவ்வுலகிலே ஒரு விஷயத்தை எண்ணி ஆசைப்படுவதற்கே தெம்பு வேண்டியிருக்கிறது. அந்த ஆசை பூர்த்தியாகும் வரையில் ஆசையாக நீடிக்க வேண்டும் - அதாவது சிலகாலமாவது நீடிக்க வேண்டும். ஆசை என்று தோன்றிவிட்டு மறைந்து விடக்கூடாது. பரிபூரணமாக அடைவதற்கு இடைவிடாது பாடுபட்டு உழைக்க வேண்டும். ஆசையும் அந்த ஆசை காரணமாக உழைப்பும், சோமுசுந்தர முதலியாரிடம் பரிபூரணமாகக் கலந்து அமைந்திருந்தன.

இந்தப் பிரபஞ்சத்திலே உழைப்பு என்ற ஒரு சக்தியும், அந்தச் சக்தியை இயக்கும் காரணமாக ஆசை என்று ஒரு சக்தியும் ஒன்றையொன்று தழுவி நெருங்கி நிற்கின்றன. இவை இரண்டும் நித்தியமான, அழியாத சக்திகள். இந்த இரண்டு சக்திகளையும் மீறி மனிதன் வாழ முடியாது. வாழ முயல்வது மதியீனம் - பைத்தியக்காரத்தனம்.

சாம்பமூர்த்தி ராயர் மிகவும் நல்லவர். தூய்மையான எளிய உள்ளம் படைத்தவர். தான தருமங்கள் செய்வதே பொருள் படைத்தவரின் கடமை என்று எண்ணுபவர். நிஷ்காமியமாக வாழ்கை நடத்தி அதைப் பரத்துக்குப் பூரானா சாதகமாக வைத்து விடவேண்டும் என்று எண்ணினார். 

பெரியவன், சின்னவன், பணக்காரன், ஏழை என்கிறோம். ஆனால் கடவுள் இரண்டு பேரையுந்தான் படைச்சிருக்கான். பணத்திலே பணக்காரணாக இருப்பவன் மற்ற எவ்வளவோ விஷயங்களில் ஏழையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்; பெரியவனுக்கு பெரிய கஷ்டங்களும்.

மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான் சக்திகள், நவ நவமன உணர்ச்சிகள் விநாடிக்கு விநாஅடி மூளுகின்றன - மூண்டு மூண்டு போராடுகின்றன. இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு விநாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த விநாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. ஆனால் இந்தச் சக்தியுனுடைய ஆட்சி நீடிப்பதும் ஒரே விநாடிதான். இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியக மனிதன் உள்ளத்திலே ஒரு லட்சியத்தை, ஒரு தெய்வத்தைக் கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்து விட்டானானால் அவனைப் பாக்கியசாலி என்றே சொல்லவேண்டும். 

சிந்திப்பவன் தன் சிந்தனைகளின் பலாபலன்களைப் பற்றி நினைக்காதவனாக இருக்க வேண்டும். ஆனால் சிந்தனை தன்னை எங்கே கொண்டுபோய் விடுமோ, என்ன செய்யத் தூண்டுமோ என்று பயப்படுகிறவன் சிந்திக்கச் சக்தி இல்லாமல் இருப்பதே நலம்.  தவிரவும் வாழ்கையிலே சிந்திக்கவேண்டியவற்றை எல்லாம் பற்றிச் சிந்தித்து, கூடுமானவரையில் முடிவு கட்டி விட்டுப் பிறகு வாழ ஆரம்பிப்பவனே கெட்டிக்காரன். பழைய காலத்துக் குருகுல வாழ்க்கைக்கு இதுதான் அர்த்தம் போலும். வாழ்க்கை வழிகள் குருகுலத்தை விட்டு வெளியேறுமுன் திடமாகிவிட வேண்டும். இந்த வழி போகலாமா, அந்த வழி போகலாம என்று வழி நெடுகிலும் யோசித்துக்கொண்டே போகிறவன் எங்குமே போய்ச் சேரமாட்டான் என்பது நிச்சயம். வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதனும் அவன் போகிற திசைப்பற்றியேனும் நிச்சயம் செய்த்துக்கொண்டுதான் ஆகவேண்டும். சிறுசிறு பிரச்சனைகளைக்கூட அவை எழும்பொழுது, விநாடியிலே, தீர்த்துக்கொண்டுவிடலாம் என்று எண்ணுவது பிசகு என்பதுதான் அனுபவ ரகசியம். அப்படித் தீத்துக்கொள்ள முடியவே முடியாது. சிந்தித்து முடிவு கட்டுவதற்குள் பிரச்சனைகளின் தன்மை தீர்ந்துவிடும். முடிவு கட்டிப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் வரையில் பிரச்சனைகள் பிரச்சனைகளாகக் காத்திருக்க மறுக்கின்றன.


===========================

எனது  மற்ற வலைப்பதிவுகள்

நாளும் ஒரு திருக்குறள் - https://DailyProjectThirukkural.blogspot.com/