Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

October 25, 2020

பொய்த்தேவு - க.நா.சுப்ரமண்யம்

 பொய்த்தேவு  - க.நா.சுப்ரமண்யம்


எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் எழுதிய பொய்த்தேவு (அதாவது பொய்த் தெய்வம்) என்னும் இந்நாவலை நான் இருநாட்களில் (மொத்தமாக 8 மணி நேரத்தில்) வாசித்தேன். இதை எதற்கு சொல்கிறேன்? எளிமையான சரளமான நாவல். ஆனால் மிக நல்ல நாவல். சோமு என்ற பொடிப் பயல் எப்படி சோமு முதலி ஆகி சோமு பண்டாரமாக இறக்கிறான். இந்நாவலில் சோமுவின் வாழ்க்கைப் பயணத்தின் சில பக்கங்களின் மூலமாக வாழ்வின் பற்பல தளங்களையும் பல மனிதர்களின் குணாதிசியங்களையும் தொட்டுச் செல்கிறார் க.நா.சு. 

முதல் அத்தியாயமே சோமு பிறக்கும் மேட்டுத் தெருவை பற்றி. இம்மேட்டுத் தெருவில் உள்ளோர் பெரும்பாலும் இழிந்தோர்கள் எனலாம். சிலர் நாணயமான வேலையில் நம்பிக்கை இல்லாதவர்கள். சில இரவுகள் ஈன்றிவிட்டுப் போதுமென்ற மனசுடன் மறு சந்தர்ப்பம் வாய்க்கும் வரையில் காத்திருப்பார்கள். சிலர் எதுவும் செய்யாமல் பிறர் காரியங்களில் தலையிட்டு தரகு அடித்துப் பிழைப்பார்கள். வேலை செய்யாமலும் பிழைக்காமலும் நடைப் பிணங்களாகவே நடமாடித் திரியும் ஜந்துக்களுக்கும் இம்மேட்டுத்தெருவிலே குறைவில்லை. 

அத்தகைய மேட்டுத் தெருவிலே தான் சோமு பிறக்கிறான். அவன் வளர்ந்து பெரியாளாகி பணக்காரணாகியும் இறுதிவரையில் அத்தெருவைவிட்டு அவன் வெளியே வரவேயில்லை. அது அவனது மனதை காண்பிக்கிறது. அவன் அறிவு வளர்ந்தாலும் அவன் ஞானம் வளரவே இல்லை. அவன் இழிவாகவே உள்ளான் என்று. 

பிறரை உடல் வலிமையால் அதட்டி பிழைத்து வாழும் கறுப்புக்கும் வள்ளியமைக்கும் பிறந்தவன் சோமு பயல் . ஆனால் அவர்கள் பெற்றோர்கள் திருமணம் செய்துக்கொண்டவர்கள் அல்ல. அது ஒருவித தகாத உறவு. சோமுவின் மிக இளம் வயதிலேயே அவன் தந்தை கறுப்பு இறக்கிறான். பின்பு சோமு “கறுப்பு மகன்” என்னும் சமூகத்தின் அடையாளப்படுத்தலால் வளர்கிறான். சிலர் அவனை “அப்பனைப் போல் இல்லாமல், நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே!” என்கிறார்கள். அந்த வார்த்தைகள் அவன் ஆயுள் பூராவுமே ரீங்காரமிட்டன. 

சோமு முதலியின் குழந்தைப் பருவ ஞாபங்களில் இருப்பது கோயில் மணி ஓசை, ஒளி, புயல். ஆனால் அக்கோயில் மணியின் ஓசையை அவன் இறுதியில் மட்டுமே கேட்கிறான். இடையில் எத்தனை முறை கோயில் மணி அடித்தாலும் அவன் ஆழ் மனதில் அது கேட்கவே இல்லை. இதுப்போல் பலருக்கு வாழ்வில் பலதடவை ஆத்ம சக்தி ஓங்கினாலும் (குறிப்பாக தவறு செய்யும் பொழுது மனசாட்சி அதனை தடுத்தாலும்) அதனை கேட்க மாட்டார்கள். அதனால் தான் என்னவோ பலரின் ஆத்ம சக்தி குறைந்துக்கொண்டே இருக்கிறது. 

சாத்தனூர் கோவில் விக்கிரங்களைவிட கோயில் மணி ஓசை சோமுவை கவர்ந்தது என்பதில் ஆச்சர்யம் இல்லை. வெறும் உலோகத்தை உருக்கி வார்த்து அந்த மாதிரி இனிய நாதம் எழுப்பும் சக்தியை அதற்குக் கொடுத்தவன் உண்மையிலேயே ஒரு கலைஞாகத்தான் இருக்கவேண்டும். அது தனி இசை; உள்ளத்தைக் கவர்ந்து உயிரையே உருகி ஓடச் செய்யும் இசை; மனிதனின் ஆத்மாவைக் கவ்வி இழுத்துக் கடவுளின் பாதாரவிந்தங்களில் பணியச் செய்வதற்கு என்று ஏற்பட்ட இசை.” என்று க.நா.சு சொல்கிறார். இக்கோவில் மணியை நமது ஆத்மாகவா நாம் உருவகிக்கலாம். நமது ஆத்மாவை நாம் ஒரு கலைஞாகவே இருந்து உருவாக்கவேண்டும். ஒரு கலைஞன் அவன் கலையில் தேர்ச்சிப் பெற அவன் எவ்வளவு உழைக்கவேண்டும். எவ்வளவற்றை விட வேண்டும். அப்பொழுது தான் அவன் கலை அவனுக்கு கைக்கூடும். அதுப்போல தான் ஒருவனின் ஆத்ம பலம். ஒருநாளில் வார்ப்பது அல்ல. 

சோமு மேட்டுச்தெருவிலேயே அலைந்து திரிந்து வளர்வதைக் கண்ட சோமுவின் அம்மா வள்ளியம்மை அவனை அவ்வூர் மிராசுதாரர் ரங்கா ராயரிடம் சேர்த்துவிடுகிறாள். ரங்கா ராயரிடம் கூடமாட ஒத்தாசை செய்து வேலையாளாக இருக்கிறான் சோமு. ரங்கா பல நன்மைகள் செய்து ஊரில் நற்பெயர் வாங்கினாலும் ரங்காவிடம் சோமு ”காண்பது” பணத்தின் மதிப்பை மட்டுமே. ஒரு 10 ரூபாய் வைத்துக்கொண்டு சாத்தனூர் கிராமத்தையே வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அடைவது வரை எது நீடிக்கிறதோ அதுவே ஆசை. மற்றவை எல்லாம் நீராவி போன்ற கற்பனைகள் எனலாம். சோமு ஆசைகளை கொண்டவன். ஏக்கங்கள் கொண்டவன். அதற்காக உழைப்பவன். ரங்காவிடம் அவன் கண்ட பணமே அவனது லட்சியம் என்று கூறுவது மிகையாகது. சோமு வளர்ந்து பெரியாள் ஆகி பணத்தை அளவில்லாது சம்பாதிக்கிறான். 

சோமு வளரும் பொழுது ரங்கா அவனிடம் சிதம்பரம் என்னும் குதிரை ஓட்டியிடம் சகவாசம் வைத்துக்கொள்ளதே என்று கூறுகிறார். ஏனெனில் அவன் ஒரு உதாவாக்கரை. நீயும் அப்படி ஆகாதே என்று. ஆனால் சோமு ரகசியமாக சிதம்பரத்துடன் சிநேகம் வைத்துக்கொள்கிறான். சிறு வயதில் ஆரம்பித்த இந்த ரகசிய வாக்கு மீறல் அவன் வாழ்நாளில் இறுதிவரை வெவ்வேறு வடிவில் தொடர்கிறது. அவன் குடி, கூத்தியாள், அளவு மீறும் பாலியல் கற்பனைகள் என்று அவன் சீர்க்கெடும் பல இடங்கள் அவனை பொருத்த அளவில் ரகசியம் (கிணத்துக்குள்ள குசு விட்டால் வெளியே தெரியாது என்பது போன்ற ரகசியம்). ஏனெனில் இவனுடைய வீடுகட்டும் ரகசியத்தைப் பற்றி ரங்காச்சாரியார் தீடீர் என்று அவனிடம் கேட்டுவிடுவார். அதேப்போல் சோமுவின் கள்ள உறவுகளை இவ்வூர் மக்கள் பார்த்துக்கொண்டே இருப்பர். பின்னே ஏசுவர். குறிப்பாக இறுதியில் சோமுவின் ஆசிரியர் சுப்ரமணியரின் பேரன் சாமா (சுவாமிநாதன்) சாம்பமூர்த்தி இறந்துவிட்டார் என்ற செய்தியை சொன்ன உடன் அடுத்ததாக என்னைப்போன்றவருக்கு கோமளவிலாஸில் (அதன் கிரஹ ப்ரவேசத்தில்) என்ன வேலை இருக்க போகிறது? என்னைப்போன்றோர் வந்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பான். அவ்வார்த்தையில் உடைந்துவிடுவான் சோமு என்று சொன்னால் மிகையாகது. ஏனெனில் அவனின் பணம் அவனுடைய வெற்றியாக கருதும் பங்களாவை ஆதம்பலம் கொண்ட சாமா போன்றோர் அதை துச்சமாக கருதுகிறார்கள். அப்பொழுது அவனுக்கு மணி ஓசை கேட்கும். குழந்தை காலத்துக்கு பிறகு நடுவில் பல ஆண்டுகள் (அவன் ஆத்ம சக்தி)யின் மணி ஓசை அடித்தாலும் அதனை சோமு கேட்கவே இல்லை. ஏனெனில் இது அறவழியில் வந்த சாமா போன்றவரிடம் இருந்து வரும் ஓசை. அதுவே ஆத்ம சக்தியின் வலிமை எனலாம். 

அதேப்போல் சோமுவின் இளமைப்பருவம் அவன் வாழ்நாள் எல்லாம் தாக்கம் செலுத்தும் என்பதற்கு உதாரணம் - சோமு தைரியமாக நீதிபதியிடம் சென்று போலிஸை அழைத்து வந்து அவனது எஜமான் ரங்கா ராயரை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான். இந்த மனதிடம் அவனை எக்காரியத்தை செய்து முடிப்பவன் என்பதற்கு உதாரணம். ஏனெனில் பிந்நாளில் அந்த ஊருக்கு ரயில் ஸ்டேஷன் வர காரணமாக இருக்கிறான். எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றிப் பெறுகிறான். 

”மனிதனுடைய ஞாபகம், மனசு ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. இப்படிப் பிடித்துக்கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது. முக்கியம், முக்கியம் அல்லாதது என்பது பற்றியெல்லாம் கவலை படுவதே இல்லை இந்த மனசு. ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டால் ஆயுசு பூராவும் நழுவ விடவே விடாமல் வைத்துக் காப்பாறியும் தருகிறது. அதுவே மனசின் கிறுக்கு” என்று க.நா.சு சொல்கிறார். அதனால் தான் என்னவோ சோமு பணத்தை பெற்று வாழ்வில் மற்றவற்றை கோட்டைவிட்டான் என்று சொல்லவேண்டும். குறிப்பாக அவன் ஆத்ம சக்தியை.

பல தெய்வங்கள் உண்டு. பணம், ஆசைகள், சிந்தனைகள், உதவி, உழைப்பு. ஆனால் சோமு பணம் என்னும் ஒரே தெய்வத்தை மட்டுமே கண்டான். அதற்காக திட்டமிட்டு உழைத்தான். கல்வி கற்றான், தொழிலை சுத்தமாக சீரும் சிறப்புமாக செய்தான். அவன் மளிகை கடை வைத்தாலும் தரம் வாய்ந்த பொருள்களை வாங்கினான். அமேரிக்க வியாபார யுக்திகளை மாத இதழ்கள் (magazine) மூலம் கற்று தன் வியாபரத்தை பெறுக்கினான். பல தொழில்கள் செய்தான் - இன்சூரன்ஸ், மெர்சண்ட் என்று பல தொழில்களை செய்தான். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். உழைத்தால் மட்டும் பணம் ஈட்டமுடியும் என்று நம்பி திட்டமிட்டு உழைத்தான். ஆடம்பரமாக செலவு செய்யவே மாட்டான். கம்பனியிடம் இருந்து சோமு ஒரு கார் வாங்கினான். ஆனால் அதன் செலவு, பெட்ரோல் என எல்லாம் கம்பெனி செலவில் வந்தன. இவனோ அக்காரில் இன்சூரன்ஸ் தொழில் செய்து சம்பாதித்தான். இவனை பார்த்து கார் வாங்கிய மற்ற ஊர் பணக்கார்கள் காருக்கு செலவு மட்டுமே செய்தார்கள். சோமு பணம் சம்பந்தமான எதுவாக இருந்தாலும் அதில் சூரப்புலியாக செயல்பட்டான்.

உழைப்பை நம்பிய சோமு எவ்வளவு சம்பாத்திதாலும் என்றும் ஒரு பிடி அளவு நிலத்தை கூட வாங்கியது இல்லை. ஏனெனில் வெறும் நிலத்தை வாங்கி அது காசு கொடுக்கும் என்று நம்புவோர் போன்று சோமு நம்பவில்லை. ஏனெனில் பலர் நிலத்தை வாங்கி வைத்துவிட்டு அதுனை உழாமல் நாளைக்கே அது வளர்ந்து பொன் தரவேண்டும் என்று நினைக்கின்றனர். உழைக்க தயாராக இல்லை. பிறர் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்று அக்கறைக்கொள்கின்றனர் அந்த சோம்பேறிகள். 

ஆனால் இவ்வளவு உழைக்கும் சோமு தன் சிந்தனைகளை எல்லாம் பணத்தில் குவித்து இருக்கும் சோமு கோட்டை விட்டது ஆத்ம பலத்தில். ஏனெனில் இவன் வாலிபனாக இருக்கும் பொழுது அளவு கடந்த காம கற்பனைகளிலும், கூத்தியாள் சகவாசங்களிலும் திரிந்தான். ஆனால் பின்பு உழைப்பின் பக்கம் வந்தாலும் அவன் இரகசியமாக மறுபடியும் கூத்தியாள்களிடமே செல்கிறான். ஆனால் இதற்கு நேர் எதிராக க.நா.சு ரங்கா ராவையும் அவரதும் மாப்பிள்ளை சாம்பமுர்த்தியையும் காண்பிக்கிறார். ரங்கா ராவ் ஒரு சொத்து வழக்கில் தோற்றாலும் மனம்விடாது உயர்நீதிமன்றத்தில் போராடி வெற்றிப் பெறுகிறார். அதேப்போல் சாம்பமூர்த்தி அவன் மனைவி கங்காபாய் இறந்தப் பிறகு தனது பணத்தை எல்லாம் தீர்த்தப் பிறகு கூத்தியாளிடம் சென்று தவறு செய்கிறான். ஆனால் அவன் ஆத்மபலம் அவனை ஒரு வினாடியில் துவக்கத்திலேயே காப்பாற்றிவிடுகிறது. அவனை நல்வழிப்படுத்தி மறுபடியும் கோயில் பூஜை சேவை என்று ஈடுபடவைக்கிறது. ஏன் சாம்பமூர்த்தியின் ஆத்ம பலம் அதிமாக இருந்தது என்றால் அவன் பூஜை, சேவை, என்று மனதை நல்வழிப்படுத்தினான். நேர்மையாக இருந்தான். பொருளின் மீது மயக்கம் கொள்ளவில்லை. மேலும் தர்மம் தலைக்காக்கும் என்பதுப்போல், அவன் மகன் சுப்ரமணியம் நன்கு படித்து நல்ல ஒரு வியாபாரத்தை துவங்குவான்.

ஆனால் சோமு முதலி அப்படி அல்ல.  சாம்பமூர்த்திக்கு இருந்த ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான். சோமுவுக்கு பணம் ஒன்றே பிராதனம். அதனால் தான் அவனால் ஆத்ம சக்தியை வளர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவன் எவ்வளவு பணம் சம்பாத்தித்தும் பூரண மனிதன் ஆகவில்லையே என்று சோமு வருந்தினான். புண்ணியத்தையும் சம்பாத்திக்கவில்லை. சோமுவின் மகன் நடராஜன் சீர்கேட்டு உதவாக்கரையாக வளர்வான்.

சோமு தவறு செய்யும் பொழுது எல்லாம் “கறுப்பு முதலி பையன் கறுப்பு மாதிரி தான் இருப்பான்” என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுத்துக்கொண்டே இருக்கின்றன. இவ்வூரும் இரக்கமற்று அதையே நினைவூட்டுகிறது. ஏனெனில் அது அவன் பால்யத்திலும் வாலிபத்திலும் அவன் மனதில் கொண்ட தவறான எண்ணங்களால் விளைந்தவை. 

ரங்கா ராவ் மீது தவறுகள் உண்டு. அவர் ஆடம்பரமாக கல்யாணத்தை கடன் வாங்கி செய்தார். அதன் விளைவாக வட்டியும் கடனும் கட்ட அவர் செல்வத்திலும் நிலம் போன்ற ஆஸ்திகளை விற்று இழந்தார். ரங்கா ராவும் சரி சாம்பமூர்த்தியும் சரி தங்கள் பரம்பரை சொத்தை விற்று தானம் செய்தார்கள். ஆனால் அது தவறு. இவற்றையெல்லாம் அவர்கள் துவக்கத்திலேயே திருத்தி இருக்க வேண்டும். ஒரு திட்டத்துடன் இறங்கி இருக்க வேண்டும். வரும் பொழுது பார்த்துக்கொள்ளலம் என்பதெல்லாம் தவறு. போகும் இடம் தெரியாதவன் எந்த ஒரு ஊருக்கும் போய் சேர மாட்டான். ரங்காவும் சாம்பமூர்த்தியும் தங்களது சொத்துக்களை விருத்தி செய்து இருக்கவேண்டும். வரும் இலாபத்தில் இருந்து தானங்களையும் சேவைகளையும் செய்து இருக்க வேண்டும். அதுவே நல்ல ஒரு ஏற்பாடு. அவர்கள் பொருளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. இறுதியில் பொருள் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

மேட்டுத் தெருல பிறந்த சோமு கடைசி வரைக்கும் அங்கேயே இருக்கான். ஏன்னா அவன் ஆத்மா சக்தி ஓங்கவில்லை என்பதே காரணம். ஏன் ஆத்ம சக்தி ஓங்கவில்லை? அவன் பணம் சம்பாத்தித்தான். ஆனால் அவன் கீழ்மைகளை உதரவில்லை அறுக்கவுமில்லை. அவன் கீழ்மைகள் அவனுள் ஆழமாக இருந்தது. சமயம் பார்த்து அவனை வஞ்சித்தது (வாலிபம் திரும்பி பெண்களிடம் சென்றான். தன் மதிப்பை குறைத்துக்கொண்டான்). கீழ்மையில் இருப்பதை உணரவில்லை. சாக்கடைப் போன்ற மேட்டுத் தெருவும் கீழ்மையின் சின்னம் என்பதை உணரவில்லை. அதனால் தான் அவன் மேட்டுத் தெருவிலேயே இருந்துவிட்டான். அது ஒரு குறியீடு. சொல்லப்போனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தப் பிறகு வேறு ஏதோ ஒரு சாத்தனூர் கிராமத்தில் இறக்கிறான். அவ்வூரிலும் மேட்டுத் தெரு இருக்கிறது.

அதனால் மனிதன் அவ்வப்போது சிந்திக்க வேண்டும். அதற்கு அவகாசமும் வேண்டும். இரண்டும் வேண்டும். சிந்திப்பதை தொடர்ந்து செய்யவேண்டும். ஆனால் சிந்தனையுடன் நிறுத்திவிடக் கூடாது. செயலில் தன் சிந்தனையை காண்பிக்க வேண்டும். அதுவே அவனை நல்வழிப்படுத்தும். அவன் ஆத்ம பலத்தைக் கூட்டும். 

எல்லோரும் தவறு செய்வது ஒரு நொடியில். அந்த ஒரு நொடியை கடக்க சிந்திக்க வேண்டும். 

உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வமும் உண்டு - இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாஅடிக்கொரு தெய்வம் உண்டு” என்று சோமு பண்டாரம் சொல்வதாக க.நா.சு சொல்கிறார். இதன் உள்ளார்ந்த அர்த்தம் பணம் (மட்டுமே) தெய்வம் அல்ல. சொல்லப்போனால் பணம் ஒரு பொய்த்தேவு / பொய்யான தெய்வம். பணம் இருந்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்னும் மாயம் கொண்ட தெய்வம். வாழ்வில் மற்ற முக்கியமான தெய்வங்கள் உண்டு. அதனால் தான் நாவலின் கடைசியில் சாமா சொல்கிறான் சோமு போன்ற உழைப்பால் முன்னேறிய பணக்காரர்கள் இவ்வுலகிற்கு வேண்டாம், ஏனெனில் இவர்கள் ஒரு விதத்தில் பணக்காரர்களாக இருந்தாலும் பல முக்கியமான விஷயங்களில் ஏழையாகவே இருக்கிறார்கள். குறிப்பாக கீழ்மைகளை கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்வுலகிற்கு சாம்பமூர்த்திப் போன்ற ஆசாமிகள் தான் தேவை ஏனெனில் அவரிடம் செல்வம் குறைந்தாலும் குணம் குறையவில்லை. அவரிடம் ஆத்மபலம் அதிகமாகவே இருந்தது. அவரைப்போன்றோர் செயலாற்ற வேண்டும்.

============================================

மேலும் - நாவலில் இருந்து சில பத்திகள்

ஏழைகளாகப் பிறந்து பசி தாகத்தைப் பரிபூரணமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே உள்ளத்திலே எண்ணிறந்த அற்புதமான கனவுகள் நிறைந்திருப்பதற்கும், பணக்காரர்களாகப் பிறந்து விட்டவர்களுக்கு ஒரு திருப்தி, வயிறு நிறைந்த தன்மை, சோம்பல், தூக்கம் இவை தவிர வாழ்க்கையிலே வேறு ஒன்றுமே இல்லாதிருப்பதற்கும் பொதுவாக இதுதான் காரணம் போலும்! பசியையும் தாகத்தையும் தலை தூக்க விடாமல் வயிற்றை நிரப்பிக்கொண்டு வளர்ந்து பெரியவர்களாகி விட்டவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதன் மகிமைகள் பூராவும் நிச்சய்மாக தெரியது என்று தைரியமாகவே சொல்லலாம்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு வினாடியுமே முக்கியமானதுதான் - அற்புதமானது தான் - முடிவற்றதுதான்!

ஒரு மனிதனுடைய ஆசைகள் ஒரே வினாடியில் பூர்த்தியாகி விடுகின்றன. இன்னொருவனுடைய ஆசைகள் ஏழேழு தலை முறைக்கும் பூர்த்தியாக மாட்டாதவை என்று அதே வினாடியில் தெரிகிறது. ஆமாம், ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆசைகளே இல்லாத மனிதர்களும் இருந்து, வாழ்ந்து வினாடிக்குப் பின் வினாடியாகக் கழித்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இவ்வுலகிலே ஒரு விஷயத்தை எண்ணி ஆசைப்படுவதற்கே தெம்பு வேண்டியிருக்கிறது. அந்த ஆசை பூர்த்தியாகும் வரையில் ஆசையாக நீடிக்க வேண்டும் - அதாவது சிலகாலமாவது நீடிக்க வேண்டும். ஆசை என்று தோன்றிவிட்டு மறைந்து விடக்கூடாது. பரிபூரணமாக அடைவதற்கு இடைவிடாது பாடுபட்டு உழைக்க வேண்டும். ஆசையும் அந்த ஆசை காரணமாக உழைப்பும், சோமுசுந்தர முதலியாரிடம் பரிபூரணமாகக் கலந்து அமைந்திருந்தன.

இந்தப் பிரபஞ்சத்திலே உழைப்பு என்ற ஒரு சக்தியும், அந்தச் சக்தியை இயக்கும் காரணமாக ஆசை என்று ஒரு சக்தியும் ஒன்றையொன்று தழுவி நெருங்கி நிற்கின்றன. இவை இரண்டும் நித்தியமான, அழியாத சக்திகள். இந்த இரண்டு சக்திகளையும் மீறி மனிதன் வாழ முடியாது. வாழ முயல்வது மதியீனம் - பைத்தியக்காரத்தனம்.

சாம்பமூர்த்தி ராயர் மிகவும் நல்லவர். தூய்மையான எளிய உள்ளம் படைத்தவர். தான தருமங்கள் செய்வதே பொருள் படைத்தவரின் கடமை என்று எண்ணுபவர். நிஷ்காமியமாக வாழ்கை நடத்தி அதைப் பரத்துக்குப் பூரானா சாதகமாக வைத்து விடவேண்டும் என்று எண்ணினார். 

பெரியவன், சின்னவன், பணக்காரன், ஏழை என்கிறோம். ஆனால் கடவுள் இரண்டு பேரையுந்தான் படைச்சிருக்கான். பணத்திலே பணக்காரணாக இருப்பவன் மற்ற எவ்வளவோ விஷயங்களில் ஏழையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்; பெரியவனுக்கு பெரிய கஷ்டங்களும்.

மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான் சக்திகள், நவ நவமன உணர்ச்சிகள் விநாடிக்கு விநாஅடி மூளுகின்றன - மூண்டு மூண்டு போராடுகின்றன. இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு விநாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த விநாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. ஆனால் இந்தச் சக்தியுனுடைய ஆட்சி நீடிப்பதும் ஒரே விநாடிதான். இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியக மனிதன் உள்ளத்திலே ஒரு லட்சியத்தை, ஒரு தெய்வத்தைக் கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்து விட்டானானால் அவனைப் பாக்கியசாலி என்றே சொல்லவேண்டும். 

சிந்திப்பவன் தன் சிந்தனைகளின் பலாபலன்களைப் பற்றி நினைக்காதவனாக இருக்க வேண்டும். ஆனால் சிந்தனை தன்னை எங்கே கொண்டுபோய் விடுமோ, என்ன செய்யத் தூண்டுமோ என்று பயப்படுகிறவன் சிந்திக்கச் சக்தி இல்லாமல் இருப்பதே நலம்.  தவிரவும் வாழ்கையிலே சிந்திக்கவேண்டியவற்றை எல்லாம் பற்றிச் சிந்தித்து, கூடுமானவரையில் முடிவு கட்டி விட்டுப் பிறகு வாழ ஆரம்பிப்பவனே கெட்டிக்காரன். பழைய காலத்துக் குருகுல வாழ்க்கைக்கு இதுதான் அர்த்தம் போலும். வாழ்க்கை வழிகள் குருகுலத்தை விட்டு வெளியேறுமுன் திடமாகிவிட வேண்டும். இந்த வழி போகலாமா, அந்த வழி போகலாம என்று வழி நெடுகிலும் யோசித்துக்கொண்டே போகிறவன் எங்குமே போய்ச் சேரமாட்டான் என்பது நிச்சயம். வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதனும் அவன் போகிற திசைப்பற்றியேனும் நிச்சயம் செய்த்துக்கொண்டுதான் ஆகவேண்டும். சிறுசிறு பிரச்சனைகளைக்கூட அவை எழும்பொழுது, விநாடியிலே, தீர்த்துக்கொண்டுவிடலாம் என்று எண்ணுவது பிசகு என்பதுதான் அனுபவ ரகசியம். அப்படித் தீத்துக்கொள்ள முடியவே முடியாது. சிந்தித்து முடிவு கட்டுவதற்குள் பிரச்சனைகளின் தன்மை தீர்ந்துவிடும். முடிவு கட்டிப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் வரையில் பிரச்சனைகள் பிரச்சனைகளாகக் காத்திருக்க மறுக்கின்றன.


===========================

எனது  மற்ற வலைப்பதிவுகள்

நாளும் ஒரு திருக்குறள் - https://DailyProjectThirukkural.blogspot.com/

October 15, 2020

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு

 



நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்).  ஆனால், கடந்த ஒரு வருடமாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல்.

1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “எண்ணித் துணிக கருமம்”. அக்குறளை ஒரு சங்கல்பமாகவே சொல்லிக்கொண்டு இச்செயலை துவங்கினேன். பல மாதங்கள் குறள்களை கற்று உரை எழுதாத காலங்களிலும், உரை எழுத வேண்டாம் வெறும் கற்றால் போதும் என்ற நினைப்புகள் வந்த காலங்களிலும் நான் சொல்லிக்கொண்டது “குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.”. அக்குறளே என்னை இச்செயலை முடிக்க முக்கியமான காரணம்.

இதுப்போல் பல குறள்கள் உள்ளன. அவற்றை பற்றி என்னால் இன்று எழுத முடியாது. எல்லா குறள்களையும் மறுபடியும் ஒரு தடவை வாசித்துவிட்டு ஒவ்வொரு அதிகாரத்திலும் சிலவற்றை தேர்ந்தெடுக்கவேண்டும். (அவற்றை Favorites என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்). 

திருக்குறள் அறத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கென்று பொருளையும் இன்பத்தையும் நிராகரிக்கவில்லை. பொருளின் நிலையாமையை கூறினாலும் பொருளின் அவசியத்தையும் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளது. உறவுகளில் இன்பம் எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைத்துள்ளது.

திருக்குறள் என்பது ஒருவன் இல்வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக நன்றாக தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இந்த லௌகீக வாழ்க்கையை தாண்டி வீடுபேறு அடைவதற்கான துறவு வாழ்க்கையையும் மிக தெளிவாக வகுத்துள்ளது. துறவியலில் கூறப்பட்டது துறவு வாழ்க்கைக்கு என்று மட்டும் அல்ல இல்வாழ்க்கைக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் (எனக்கு இருக்கிறது) என்பதில் சந்தேகமில்லை. 

வாணிப நிர்வாக மேலாண்மை கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் சில முக்கியமான தலைமை பண்புகளையும்(Leadership skills) திட்டமிடல் (Planning Skills, SWOT Analysis etc) செயல்முறை (Execution Skills, Risk Management analysis etc) பாடங்களையும் மிக தெளிவாக பொருட்பாலில் கூறப்பட்டுள்ளதை காணலாம்.

அடுத்து காமத்துப்பால். காமத்துப்பாலில் காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள அன்பை அவர்கள் காதலிக்கும் நாட்களை மிக அழகாக கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் பல குறள்கள் மிக சிறந்த மனோதத்துவங்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனை பிரிவு என்று கடந்து செல்லக்கூடும். பிரிவு தரும் துன்பம் என்று பார்க்காமல் துன்பம் என்று பார்த்தால் அது வாழ்வில் பலவற்றிற்கும் பொருந்தும் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு என்பதும் புரியும். 

பரிந்துரைகள்

திருக்குறளை நான் இப்படி பரிந்துரைப்பேன்

1) முக்கியாமான ஒரு 300-400 குறள்களை குழந்தைகள் 12 வயதிற்குள்ளாகவே மனனம் செய்யவேண்டும். முடிந்தால் அவர்களுக்கு எளிமையாக அர்த்தம் சொல்லித் தர வேண்டும்.

ஆயினும் எல்லா வயதினரும் இதனை படிக்கலாம் என்பதை நான் தனியாக கூறவேண்டியது இல்லை.

2)  12 முதல் - 15 வயது வரை அறத்துப்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். மறுபடியும் 20-22 வயது வரை மறுபடியும் வாசிக்க வேண்டும். அதன்பிறகு அடிக்கடி (தினமும் ஒரு குறள்) வாசிப்பது இன்னும் சிறப்பு

3) 12 முதல் - 15 வயது வரை பொருட்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். நேரத்தின் மதிப்பை, திட்டமிடலின் அவசியத்தை, வினைத்திட்பம், விடாமுயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, மறதியின்மை என்று பலதரபட்ட நிர்வாக திரண்களை மாணவர்களுக்கு இளமையிலேயே கற்பித்து அவர்கள் பின்பற்றச்செய்ய வேண்டும்.

ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களாக உருவாவது அந்த பருவத்தில் தான். Formative years ஆன 14 வயது வரை பிள்ளைகள் கற்பதே அவர்கள் வாழ்நாள் முழுக்க பயனுள்ளதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆதலால் இளமையில் தான் திருக்குறளை முக்கியமாக சொல்லித்தர வேண்டும். 

4) பின்பு ஒருவர் அலுவகத்தில் வேலைக்கு சேர்ந்தப்பின்பு 21-25 வயது வரை பொருட்பாலையும் அறத்துப்பாலையும் மீண்டும் நன்கு படிக்க வேண்டும். அது அவர்களின் மிக உற்சாகமான 20-30 வயது காலக்கட்டங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள அறிவுரைகளை கொடுக்கும். 

5) 20-25 வயது வரையில், மறுபடியும் கல்யாணம் ஆகும் முன்பும் ஆனப்பிறகும் காமத்துப்பாலை படித்தல்வேண்டும். உறவு ஆழமாக அமைய மிக பயனுள்ளதாக அமையும்.  பொதுவாக கடந்துச்செல்லும் நுண்ணிய உணர்வுகளை நாம் அலட்சியம் செய்யக்கூடாது என்பதை அறியலாம்.

6) திருக்குறளை எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு கீழ்காணும் பரிந்துரைகளை காணவும்

-- திருக்குறளை எப்படி மனனம், ஸ்வாத்யாயம், தியானம் செய்து கற்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விவரித்துள்ளார். அதற்கு ஜெயமோகனின் ”மனப்பாடம் (சுட்டியை தட்டவும்)”, ”குறள் என்னும் தியானநூல்”, ”குறள்;இருகடிதங்கள்”, “குறள் – கவிதையும், நீதியும்”, “இந்திய சிந்தனை மரபில் குறள் 1”,   ”இந்திய சிந்தனை மரபில் குறள் 2”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 3”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 4”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 5” கட்டுரைகளை வாசிக்கவும். 

-- திருக்குறளை எப்படி ஒரு கவிதையாக வாசிக்க வேண்டும் என்பதை பற்றி மூன்று நாட்கள் உரையாற்றியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்கான YouTube சுட்டிகள் இதோ - குறளினிது (சுட்டியை தட்டவும்)

-- எழுத்தாளர் ஜெயமோகன் மேற்சொன்ன இரண்டு சுட்டிகளிலும் ஆபத்வாக்கியம் பற்றிப் பேசியிருப்பார். திருக்குறள்களை மனனம் செய்தால் அவை கண்டிப்பாக ஆப்த்வாக்கியமாக தோன்றும். சில காலம் ஆகும். உதாரணமாக எனக்கு சில வார்த்தைகள் 1) அருமை - அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் 2) அரும்பயன் - அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 3) பொருள் - பொருளல்லவற்றை பொருள் என்று உணரும் 4) எண்ணித் துணிக 5) எண்ணிய எண்ணியாங்கு எய்துப 6) இன்பம் விழையான் 7) விழை தகையான் வேண்டி இருப்பர் 8) முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை 9) தன்னுயிர் தான்அறப் பெற்றானை 10) யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 

-- திருக்குறளை எனது தளமான http://DailyProjectThirukkural.blogspot.com/  ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பலத்தரப்பட்ட பொருளை கற்று படிக்க மிக ஏதுவாக இருக்கும். அகராதியில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் தேடி படிப்பதைக்காட்டிலும் இங்கு ஒரே இடத்தில் அகராதியில் உள்ள எல்லா பொருளையும் வாசிக்கலாம். ஆதலால் வேகமாகவும் ஆழமாகவும் படிக்கலாம்

-- திருக்குறள் தான் வேதவாக்கு என்று எல்லாம் சொல்லமாட்டேன். பலதரப்பட்ட புத்தகங்களை வாசித்து அவற்றுடன் திருக்குளை தொடர்பு படுத்தி, திருக்குறளை மற்றவற்றுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் நம் மனதில் திருக்குறள் நன்றாக பதியும். பொதுவாக விஸ்தாரமான வாசிப்பும் ஆழமான புரிதலும் நுண்ணிய கல்வியிற்கு அவசியம்.

-- திருக்குறள் ஒரு செவ்வியநூல். ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட. (- எழுத்தாளர் ஜெயமோகன் - குறள்- கடிதம்)

-- ஒரு முழுமையான பார்வை வேண்டும் என்றால் எல்லா திருக்குறள்களையும் கற்றல் அவசியம். சில குறள்கள் முழுமையானவையாக இருக்கும். உதாரணமாக “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”. ஆனால் “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறளை மட்டும் படித்துவிட்டு இமயமலை ஏறச்சென்று வானிலை சரியில்லை என்று அறிந்தப்பின்பும் இமயமலை ஏறத் தொடர்ந்தால் உயிர் தான் போகும். அதற்குத்தான் “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற குறளையும் படித்து இருக்க வேண்டும். அதேப்போல் “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.” என்பதை மட்டும் படித்துவிட்டு பொருளை நிராகரித்தால் துன்பமே எஞ்சும். அதற்கு தான் “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” என்பதையும் உணர்ந்து பொருளை ஈட்ட வேண்டும். அப்படிச் செய்தால் தான் அறம் பொருள் இன்பம் சமநிலையில் இருக்கும். 

ஒரு சமச்சீரான அணுகுமுறைக்கு திருக்குறளை முழுமையாக கற்றல் மிக பயனுள்ளதாக இருக்கும். 

-- ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் கற்பதாக இருந்தால் நீங்கள் உங்களுக்கு உகந்த வழியில் கற்கவும் அதாவது, 1,2,3,4,5,6, என்ற குறள் வரிசையில் கற்கலாம், அல்லது 1,2,3,4,5 என்ற அதிகாரவரிசையில் உள்ள முதல் குறள் அல்லது ஏதாவது ஒரு குறள், அல்லது அதிகார வரிசையும் இன்று குறள் வரிசையும் இன்றி ஏதாவது ஒரு குறளையும் கற்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு நல்லது உண்டு. அது அவரவர் தேவைகளைக்கும் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். 

நான் எப்படிச் செய்தேன் என்றால், (1) வரிசையாக ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று முறையில் சென்றேன், பிறகு முதல் அதிகாரத்தில் இருந்து மறுபடியும். இதில் உள்ள நல்லது என்னவென்றால் திருக்குறளில் உள்ள ஒரு முழுமையான நோக்கு கிடைத்துவிடும். தேவையற்ற முரணான எண்ணங்களை மனதில் சுமக்கவேண்டாம். சிலசமயம் தவறான முன்முடிவுகளை தவரிக்கலாம். (2) முதல் தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுது அவ்வாதிகாரத்தில் உள்ள எல்லா குறள்களையும் ஒருதடவை வாசித்துவிட்டு அதற்கான சாலமன் பாப்பையா போன்றவர்களின் எளிய உரைகளையும் வாசிக்கலாம். இது அவ்வதிகாரத்தின் முழு சாராம்சத்தையும் கொடுத்துவிடும். (3) ஒவ்வொரு தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுதும் அவ்வதிகாரத்தில் உள்ள முந்திய 2-3 குறள்களை மனனம் செய்வது அல்லது அதன் அர்த்தங்களை ஆழ்ந்து வாசித்து மனதில் நன்கு பதியவைப்பது நன்று. ஏனெனில் நாம் ஒரு தடவை வாசிப்பதால் கல்லில் பதிவதுப்போன்று அர்த்தம் (எல்லோருக்கும்) பதிந்துவிடாது. மறுபடியும் மறுபடியும் படிக்க படிக்க தான் நம் மனதில் நன்றாக பதியும். அது நமது செயலிலும் தென்ப்படும்.

-- பிறருக்கு கற்பித்தல்: நாம் திருக்குறளுக்கு கற்பிக்கும் பொழுது பல நன்மைகள் உண்டு (1) நாம் பிறருக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கிறோம். நாம் கற்றது வீணாகவில்லை (2) நாம் பிறருக்கு கற்றுத்தரும் பொழுது நாம் ஏற்கனவே படித்ததை மீண்டும் படிக்கிறோம். அதனால் அக்குறள் மனதில் பதிய அதிக வாய்ப்பு உண்டு. அதன் அர்த்தம் கண்டிப்பாய் மனதில் நன்றாக பதியும் (3) நாம் பிறருக்கு சொல்லித்தருவதால் (பிறருக்கு ஓதுவதால் நாம் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மன உறுதி நமக்கு பிறக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் நாம் முன்னேறுவோம்). ”குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்” என்பதை நினைவில் கொள்க (4) நாம் தவறாக கற்றிருந்தால் அதை கண்டுக்கொண்டு திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. நமது புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு (5) பிறருக்கு கற்றுத்தரும் பொழுது / பிறருடன் கற்கும் பொழுது அங்கே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அது பெரும்பாலும் ஒரு நல்ல தருக்கத்தை உருவாக்கும். அத்தருக்கத்தில் நாம் மிகுந்த பயனடைவோம். வாழ்வோடு தொடர்புடைய உதாரணங்கள் வெளிவரும். ஆழ்ந்த புரிந்தல் உண்டாகும். அர்த்தம் மனதில் பதியும் (6) மற்ற குறள்களுடனும் மற்ற புத்தகங்களில் உள்ள உதாரணங்களுடனும் தொடர்பு படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி நுனிப்புல்லில் இருந்து வெளிவந்து வாசிப்பு செம்மை அடைய முடியும். 

-- குழந்தைகளுக்கு கற்பித்தல்: - குழந்தைகளுக்கு கற்பிக்கும் பொழுது குறிப்பாக அவர்களை மனனம் செய்ய பழக்கும் பொழுது 1) நமக்கு நன்றாக மனனம் ஆகும். 2) நமக்கு அது ஆபத்வாக்கியங்களை உருவாக்கிக்கொடுக்கும். 3) சில வார்த்தைகள் நமக்கு நன்கு மனதில் பதியும். 4) பல அதிகாரங்களை தொடர்பு படுத்திப் பார்க்க நல்ல ஒரு வாய்ப்பும் கூட. 5) மேலும் அடுத்த தலைமுறைக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கிறோம் அதுவும் சின்ன வயதிலேயே. 

நன்றிகள்

திருக்குறள் கற்றல் செயலை செய்தற்கு சிலருக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டும். 

இறைவனுக்கு நன்றி

இச்செயல் எனக்கு அமைந்தது என் பேறு அல்லது நல்லூழ் என்பேன். இதனை வரமாக கருந்துகிறேன். ஆதலால்  இச்செயலை முடிக்க அருள்புரிந்த இறைவனின் மலர்பாதங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்கு கீழ்க்காணும் இத்தனை சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் வினைத்திட்பத்தையும் கொடுத்தது இறைவன் தான். இச்செயலை துவங்கியப்பின்பு பல மாதங்கள் திருக்குறள் கற்காமல் இருந்தாலும் என்னை மறுபடியும் அதில் செலுத்தி என்னை இச்செயலை முடிக்க துணையாக இருந்த இறைவனுக்கு மறுபடியும் நன்றி.

(இதில் வரிசை முறை என்று ஏதும் இல்லை)

-- பேராசிரியர் திரு. ஒளவை நடராஜன்

நான் 2008-2011 ஆண்டுகளில் டெல்லியில் இருக்கும் பொழுது இவர்கள் பொதிகை தொலைக்காட்சியில் காலை வேலைகளில் திருக்குறளுக்கு அர்த்தம் உரைப்பர். ஒவ்வொரு குறளுக்கும் 20 நிமிடங்களுக்கு உரை கூறுவார்கள். என்னடா இது 2 வரில உரைகள் மலைப்போல் குவிந்துள்ளன. இவர் 20 நிமிடம் சொல்கிறாரே என்று தோன்றும். ஆனால் அவரை தொடர்ந்து கேட்கையில் எப்படி திருக்குறளை உள்வாங்க வேண்டும். எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் அணுகி பொருள்க்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.நன்றி ஐயா.

-- எழுத்தாளர் ஜெயமோகன்

இச்செயலை துவக்க காலத்தில் புரியாமல்தான் செய்துக்கொண்டு இருந்தேன். அங்கே வெட்டி இங்கே வெட்டி எல்லாவற்றையும் கலந்து என்னமோ ஏதோவென்று செய்துக்கொண்டு இருந்தேன். அப்படியான காலகட்டங்களில் தான், ஒரு கடிதத்திற்கு பதிலாக எப்படி மனனம், ஸ்வாத்யாயம், தியானம் முறையில் எப்படி திருக்குறளை கற்றால் பயன் இருக்கும் என்று ஒரு சிறிய கட்டுரை எழுதி இருந்தார். அதன்படி நான் எனது கற்றல் முறையை மாற்றிக்கொண்டேன். அது எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. இல்லையேல் எனது வலைத்தளம் திருக்குறளுக்கான பத்தாயிரத்தி சொச்ச உரையாக அமைந்திருக்கும். நானும் ஆழமாக கற்று இருக்க மாட்டேன். நான் சிந்தித்து திருக்குறளை கற்றேன் என்றால் அதற்கு ஜெயமோகனே ஒளிவிளக்கு ஏற்றிவைத்தார். அதனை நோக்கியே சென்றேன்.  நன்றி ஜெ.

-- சொற்பொழிவாளர் தமிழ்க்கடல் திரு.நெல்லைக்கண்ணன்

2009, 2013 ஆண்டுகளில் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் வந்த ”தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்ற போட்டித் தொடர் நிகழ்ச்சியில் திருக்குறளின் எல்லா சுவைகளையும் பல போட்டியாளர்கள் கொடுத்தார்கள். இவர் அருமையான நெறியாளராக நடுவராக இருந்தார். மேலும் மற்ற இலக்கிய தலைப்புகளிலும் மிக நன்றாக அதன் சுவையை எடுத்து உரைத்தார். இவரின் சில பேச்சுகளில் எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும், இவர் எனது தமிழ் ஆர்வத்தை ஒரு படி மேலே உயர்த்தினார், எனது வாசிப்பு தேடலை ஒரு படி மேலே உயர்த்தினார் என்பதில் ஐயமில்லை.  அதனால் தான் நாம் பாடத்திட்டங்களுக்கும் வேலைக்கும் வெளியே மற்றவற்றை குறிப்பாக தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற செயலில் இறங்கினேன். நன்றி ஐயா

-- எனது பாட்டி சரஸ்வதி சுப்ரமணியம்

என்னை எப்பொழுதும் ஊக்கிவிக்கும் எனது பாட்டி. இது என்ன வேண்டாத வேலை என்றெல்லாம் கூறமாட்டார். நல்லது. திருக்குறளில் வாழ்க்கைக்கான எல்லாம் இருக்கு. இதை படித்தால் எல்லாத்தையும் படிச்ச மாதிரி. படி என்று என்னை ஊக்கபடுத்தினார். படிச்சு அதுமாதிரி நடந்துக்களையே என்று சிலர் நையாண்டி செய்வர் அல்லது குத்திக்காண்பிப்பர். அப்படி எல்லாம் நையாண்டி செய்யமாட்டார் பாட்டி. எல்லாவற்றையும் ஒரே அடியாக மாற்றுவது கடினம் என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவர். எல்லாவற்றையும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், சிலவற்றை பின்பற்றுகிறாயே, அதுவே முன்னேற்றம் தான். ஒரு படி மேலே சென்று இருக்கிறாய். நல்லவிஷயம் தான். அப்படியே தொடர்ந்தால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளலாம். உன்னால் முடியும் என்று கூறுவார். நான் இப்பொழுது எனது மருமகள் (ஆதாவது தங்கையின் மகள்) ப்ரத்ன்யாவிற்கு திருக்குறளை மனனம் செய்ய பயிற்சிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் (ஒருவருடத்தில் இதுவரையில் 90 திருக்குறள்கள்) . இதனைப்பார்க்கும் எனதுப்பாட்டி, எனக்கு இப்படி ஒரு மாமா இல்லையே என்று ஆதங்க படுகிறாள். நாம் நல்லது தான் செய்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறாள். ஆதலால் பாட்டிக்கும் நன்றி. 

-- பள்ளிகாலத்துத் நண்பன் S.ராஜேஷ்

2010 ஆண்டுகளில் இவனது Google Talk / Chat இன் தன்னிலை செய்தி (status message) "எண்ணித் துணிக கருமம்”, “சிறுக்கோட்டுப் பெரும் பழம்” என்று தான் இருக்கும். அவை என்னை ஈர்த்தன. அதனை கேட்டு அறிந்தேன். எனது தமிழ் ஆர்வத்தை ஆழமாக ஆக்கியது. அன்றில் இருந்து இன்று வரை நான் ஒரு முக்கியமான செயலில் ஈடுபட்டாலோ அல்லது நெடுநாட்கள் எடுக்கும் பெரிய செயல்களில் ஈடுட்பட்டாலோ நான் மனதில் சங்கல்பமாய் சொல்லிக்கொள்வது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”. நன்றி டா.

-- நண்பர் நாகமணி

இந்த செயலை துவங்கிய காலக்கட்டங்களில், இது நல்ல முயற்சி பாஸ், நல்லா பண்ணுங்க என்று ஊக்கப்படுத்தினார். நீங்களும் சேர்ந்துக்கொள்ளுங்களேன் என்று அழைத்தபொழுது, அவரும் வந்து சில பல குறள்களுக்கு உரை பதிவு செய்துள்ளார். அவ்வப்பொழுது சில மைல்கல்களை தாண்டும் பொழுது, செம பாஸ் என்று கூறுவார். சினிமா, கிரிக்கேட், அரசியல் என்பத்தை தாண்டி சற்று இலக்கியத்தை பற்றியும் இவரிடம் பேச முடியும். நன்றி பாஸ்.

-- திரு.அசோகன் சுப்பிரமணியம்

இச்செயலை துவங்கிய காலங்களில் திருக்குறள்களுக்கு பொருள் அறிந்துக்கொள்ளும் முனைப்பில் பல வலைத்தளங்களை மேய்வதுண்டு. 99% சதவிகித உரைகள் ஏற்கனவே உள்ள உரைகளை தொகுத்து வலையேற்றபட்டு இருக்கும். அதற்கு மேலே ஒரு துளி உழைப்பைக்கூட செய்து இருக்கமாட்டார்கள். ஒரு சில வலைப்புகள் சில குறள்களுக்கு மட்டும் கட்டுரை வடிவில் திருக்குறளை விவரித்து நன்றாக எழுதியிருப்பார்கள். அது பயனுள்ளதாகவும் இருந்தது. அப்படித் தேடிக்கொண்டு இருக்கையில், தற்செயலாக திரு அசோகன் சுப்பிரமணியன் அவர்களின் வலைத்தளத்தை கண்டடைந்தேன். அவரும் நான் மேற்கொண்ட பாதையில் முன்னரே பல காலமாக பயணித்துக்கொண்டு இருந்தார். ஆதலால் நாம் சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவர் விளக்கம் அளிப்பதுடன் நிறுத்திவிடாமல் திருக்குறளை இன்று புழங்கும் வார்த்தைகளை வைத்து மறு ஆக்கம் செய்து இருப்பார். பாராட்டப்பட வேண்டிய முயற்சி. பல குறள்களுக்கு மற்றவர்கள் வேறுவிதமாக(தவறாகவோ அல்லது குழப்பமாகவோ) உரை எழுதி இருந்தாலும் அவர் அவருக்கு தோன்றியதை அவருக்கு சரி எனப்பட்டதை தெளிவாக எழுதியிருந்தார். அந்த இயல்பு எனக்கும் ஒரு மனத்திட்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு சரியென பட்டதையே நானும் உரையாக எழுதினேன். திரு.அஷோக் அவர்களிடம் இருந்து சில குறள்களுக்கு வேறுபட்டு இருக்கிறேன். அவரின் உரை எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. திருக்குறளின் உரையை ஆங்கிலத்திலும் விரிவாக எழுதியது இவ்வுலகிற்கு கிடைத்த பேறு எனவே சொல்லுவேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.



பெருமை

குறள் 505 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்

இச்செயலை முடித்தது எனக்கு பெருமையே அளிக்கிறது. ஆயினும் நான் திருக்குறளை ஒரு முறை கற்று உள்ளேன். அதன் படி நடக்க, பெருமை பயக்கும் பல செயல்களை செய்ய நான் ஏறவேண்டிய சிகரங்கள் பல இருக்கிறது. அப்பெருமை எனக்கு வாய்க்க நான் செயல்களை செய்ய இறைவன் துணைப்புரியட்டும். 

குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

இச்செயலை செய்து முடித்தது என்னளவில் ஒரு பெரிய காரியம் ஆயினும் அதனை தாண்டியும் பல காரியங்கள் உள்ளன. ஆதலால் நான் சரிசெய்யவேண்டிய என்னுடைய குறைப்பாடுகளை எண்ணியும் நான் அடையவேண்டிய சால்புகளை வேண்டியும் பணிவு கொள்கிறேன். 

அடுத்து?

திருக்குறள் கற்றல் பணி தொடரும்

எனது அடுத்த செயல்களுக்கான எண்ணங்கள்

திருக்குறள்

எழுதிய எல்லா குறள்களையும் மறுவாசிப்பு செய்து தேவையெனில் சீரமைப்பு செய்ய வேண்டும். 1. துவக்க காலங்களில் சில குறள்களுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் இருந்து பொருளை எடுக்கவில்லை. அவற்றை பூர்த்தி செய்யவேண்டும் 2. எழுதிய உரைகளை தேவையெனில் பொருட்பிழைகளை களையவோ அல்லது சுருக்கவோ  அல்லது நீட்டவோ வேண்டும். 3. சொற்ப்பிழைகள், எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், வலிமிகும் வலிமிகா இடங்கள் பிழைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும்.

1. திருக்குறள் - ஒவ்வொரு அதிகாரத்திலும் முக்கியாமன 2-4 குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

2. திருக்குறள் - தலைமை பண்புகளை பறைச்சாற்றும் குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

3. திருக்குறள் - அதிகார வாரியாக கட்டுரைகள் - இது ஒரு பெரும் பணி

4. திருக்குறள் - ஆத்மார்த்தமான உறவுகளுக்கு காமத்துப்பால் சொல்லும் சில முக்கியமான மனோத்தத்துவங்கள்

5. திருக்குறள் - ஆபத் வாக்கியங்கள்

மற்றவை

மூதுரை - ஔவையார்
கொன்றை வேந்தன் - ஔவையார்
நல்வழி - ஔவையார்
புதிய ஆத்திசூடி - பாரதியார்
நாலடியார்
புறநானூறு

எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.

சமர்ப்பணம்

இச்செயலை பாதிக்கடந்து (665 குறள்கள்) இருக்கும் பொழுது தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். 

இப்பொழுது மீதமுள்ள பாதிச்செயலை (665 குறள்கள்) எனது தனிப்பெருந்துணை பாட்டி சரஸ்வதி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.

இச்செயலை மொத்தமாக எனது குழந்தை உமையாள் மற்றும் எனது தங்கை தம்பியின் பிள்ளைகளான ப்ரத்ன்யா, தன்யா, சேந்தன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் திருக்குறளையும் மற்ற நூல்களையும் கலைகளையும் கற்று அவற்றை உறுதுணையாகக்கொண்டு வாழ்வை நன்கு அமைத்துக்கொண்டு வீடுபேறு அடையவேண்டுகிறேன். இறைவன் துணைநிற்கட்டும். 

அன்புடன்
ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன்

October 03, 2020

எஸ்.பி.பாலசுப்ரமணியம் [1946-2020]



எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பி (SPB) என்னும் மூன்றெழுத்து மந்திரச்சொல்லை பற்றி அறிமுகம் செய்ய நான் ஒன்றும் அதிகப்ரசங்கியல்ல.  

அவரை பற்றி நான் கொண்ட சில நினைவுகளையும் நான் கற்ற சில துளிகளைமட்டும் இங்கு பதிவிட விரும்புகிறேன்

நான் தத்தி தவழும் பருவத்தில் அதாவது எனக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது நான் அதிகம் பாடிய? (உளறிய) பாடல் ”அம்மன் கோவில் கிழக்காலே” திரைப்படத்தில் வந்த எஸ்.பி.பி அவர்கள் பாடிய ”சின்ன மணிக் குயிலே” என்ற பாடலை. இதை நான் ”கம்மணி கம்மணி” என பாடுவேன் என்று எனது பாட்டியார் கூறிய நினைவுகள் உண்டு. அதன் பின்பு நினைவு தெரிந்த நாள் முதல் எஸ்.பி.பி பாடல்கள் அன்றாடம் காதில் விழுந்துக்கொண்டே இருக்கும். 

நான் பள்ளியில் படிக்கும் பொழுது என் உள்ளுர நான் பாடிய பாடல் எனில் அது ”தர்மத்தின் தலைவன்” திரைப்படத்தில் எஸ்.பி.பி, பி.சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்கள் இணைந்துப் பாடிய “தென்மதுரை வைகை நதிப் பாடலை” தான். பல நாட்களுக்கு அதன் வரிகள் தெரியாது. அந்த மெட்டைமட்டும் பாடிக்கொண்டு இருப்பேன்.  கல்லூரி நாட்களில் ”புன்னகை மன்னன்” திரைப்படத்தில் வந்த ”என்ன சத்தம் இந்த நேரம்” போன்று பல பாடல்களை கேட்டே வளர்ந்தேன். குறிப்பாக ”இளையநிலா பொழிகிறது”, “பனி விழும் மலர்வனம்” ஆகிய பாடல்களை எனது கல்லூரி சீனியர்களுக்கு கொடுக்கப்பட்ட (மூத்தவர்கள்) பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் நண்பர்கள் (பத்மா, ஜூட், பரச்சன்ன தேவி மற்றும் சிலர்) உடன் பாடிய அனுபவமும் உண்டு. (அந்த கொடுமையெல்லம் நடந்ததா என்று தானே கேட்கிறீர்கள்) பசுமையான நினைவுகள். எனது கல்யாண நலங்கு வைபத்தில் நான் இரண்டு பாடல்களைப் பாடினேன் ஒன்று ”வாழ்வே மாயம்” படத்தில் வந்த ”நீல வான ஓடையில்” பாடல் மற்றொன்று “தளபதி” படத்தில் வந்த “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடல். ரஜினியும் வந்தார்கள் கமலும் வந்தார்கள் எஸ்.பி.பி வழியாக. 

இப்படி எஸ்.பி.பியின் பாடல்களை நாள்தோறும் கேட்டு முனுமுனுத்து வளர்ந்தவன் நான். 

அவரைப்போல் இந்திய இசைக்கும் இந்திய திரைப்பட இசைக்கும் பிரதிநிதி யாரும் இல்லை. 40000+ பாடல்களை பாடிய ஒரே பாடகர். அந்த சாதனையை இனியாராலும் முறியடிக்க முடியாது என்றே கூறுவேன். சச்சின் டெண்டுல்கரின் ரன் சாதனைகளில் சிலவற்றை விராட் கோலி கடந்து புதிய சாதனைகளை படைப்பார். ஆனால் எஸ்.பி.பியின் சாதனைகளை கடப்பது கற்பனையில் கூட நிகழாது எனலாம். 




அவரை போல் ஒரு உன்னதமான பணிவான ஆத்மார்த்தமான மனிதரை நான் கண்டதில்லை கேட்டதுஇல்லை. அவர் மேடையில் பாடுவதை தொலைக்காட்சிகளில் பார்த்தால் நமக்கு அப்படி ஒரு உத்வேகமும் நேர்மறை சக்தியும் கிடைக்கும். அவருடைய குழந்தைப்போன்ற குதுகலமும், நகைச்சுவையும், மகிழ்ச்சியும், கலகலப்பும், கள்ளம் கபடம் அற்ற சிரிப்பும், வாழ்கையின் மீது இருந்த நேசமும், அன்பும், பண்பும், பணிவும், மேன்மையும் வியக்கதக்கவை கற்றுக்கொள்ளவேண்டியவை. அவர் பாடகராக இருந்தும் அவர் உணவு மீதுக்கொண்ட அலாதிப்பிரியம் பற்றி கேட்பதுக்கூட சுவாரசியமான ஒன்று. அவர் கிரிக்கெட் பற்றி பேசுவதை சில சந்தர்பங்களில் தொலைக்காட்சிகளில் கேட்டு இருக்கிறேன். ஒரு பள்ளிக்கூட சிறுவனின் ஆர்வத்துடன் கிரிக்கேட் பற்றி பேசுவார். பெரியவராயினும் சிறியவராயினும் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தே பேசிவந்தார். அவருக்கு கோபம் வந்து பார்த்தது இல்லை பொதுவெளியில் கோபப்பட்டதாக கேள்விபட்டதுமில்லை.

அவரைப்போல் நேர்மையான மனிதரை காண்பதும் அரிது. குடும்ப வாரிசு ஊக்குவிப்பு அன்றாடமான திரைத்துறையில் தனது குடும்பத்தாருக்காக என்றும் சிபாரிசு செய்யாதவர். தனது நண்பர்களான இசையமைப்பாளர்களான இளையராஜா மற்றும் அதன்பின் வந்த இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மானிடம் தனது தங்கை எஸ்.பி.சைலஜா அல்லது தனது மகன் எஸ்.பி.பி.சரண் ஆகியோருக்கு என்றும் வாய்ப்புகள் கேட்டதில்லை. தனது நட்புறவுகளை என்றும் எளிதாய் எடுத்துக்கொள்ளாமல் நேர்மையாக இருந்தவர். 

எஸ்.பி.பி மிக மிக நேர்மறை எண்ணங்களை சக்தியை மற்றவர்களுக்குக் கொடுத்துக்கொண்டு இருந்த உன்னத மனிதர். அவர் வாயில் இருந்து ஒரு தவறான சொல்லோ செய்தியோ நான் கேட்டது இல்லை. அவர் வாயில் இருந்து மற்றவர்களைப்பற்றிய குறையோ அவமதிப்போ கேட்டது இல்லை. எல்லோரையும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தவர் எஸ்.பி.பி அவர்கள். அவர் பல இசை போட்டிகளில் நடுவர்களில் ஒருவராக இருக்கும் பொழுதும் கூட எந்த ஒரு போட்டியாளர் மனதும் புண்படாமல் தான் தனது கருத்துக்களை கூறுவார். குறைகளாக கூறாமல் முன்னேற்றத்திற்கான படிகளாக கூறுவார். இதுவே சிறுவர்களாக இருந்தால் உங்கள் வயதில் நான் இந்த அளவுக்கூட பாடியதில்லை என்று கூறி தனது பாராட்டை வெளிப்படுத்துவார். ஒரு போட்டியாளர் நன்றாக பாடினாலோ அல்லது தான் மேடையில் அதிகம் பாடாத பாடலை தேர்ந்தெடுத்து நன்றாக பாடினாலோ மனதார பாரட்டும் குணம் கொண்டவர். அக்குணம் யார்க்கு வரும்?  அதுவும் 40000+ பாடல்கள் பாடியவருக்கு வருகிறது என்றால் அது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியதே. 

எல்லோரையும் பாராட்டும் குணம் படைத்தவர் ஆயினும் யாரைப்பார்த்தும் பொறாமை படாதவர். ஒருவேளை பொறாமையோ கர்வமோ இருந்தாலும் அது  கற்கும் ரசிக்கும் மனநிலையில் இருக்கும் ஆரோக்கியமான ஒன்று தான். பொறாமை இல்லாமல் இருந்ததால் தான் அவரால் மனதால் ஆரோக்கியமாக இருந்தது. அதனால் தான் அவரது சங்கீதமும் குரலும் பாடலும் தூய்மையாக ஆத்மார்த்தமாக இருந்தது.

எஸ்.பி.பி பற்றி மற்றொன்று சொல்லவேண்டும் என்றால் அவர் பூசல்களையும் வம்புகளையும் சர்ச்சைகளையும் அறவே விரும்பாதவர். சில ஆண்டுகள் முன்பு வந்த சர்ச்சையும் மிக மிக தேர்ந்த ஒரு வல்லுநர்ப்போல் கையாண்டார். குறிப்பாக யார் மனதையும் புண்படுத்தாமல். அவர் அவ்விடத்தில் தடித்த வார்த்தைகளை பேசியிருந்தாலும் அவரை யாரும் குறைக்கூறி இருக்கமாட்டார்கள் ஏனெனில் அவரிடத்தில் நியாயம் இருந்தது. ஆயினும் அவர் சர்ச்சையை பெரிதாக்கவில்லை. பெரிதாக்க விரும்பவுமில்லை.

எஸ்.பி.பி யிடம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. அவர் என்றும் இறைவனுக்கு நன்றித் தெரிவித்துக்கொண்டே இருந்தார். தனக்கு கொடுக்கபட்ட வாய்ப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டே இருந்தார். உலகில் எதிர்மரை செய்திகள் பல இருந்தும் அவரை சுற்றி இருந்த நன்மைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே இருந்தார். மனிதர்களுக்கு அக்குணம் கண்டிப்பாக வேண்டும். தன்னிடம் இல்லாததை நினைத்தை வாழ்க்கையையும் நேரத்தையும் அழித்துக்கொள்வோர் அதிகம் இவ்வுலகில். 

அதுமட்டும் இன்றி எஸ்.பி.பி பற்றி அவர் மறைந்தப்பிறகு நான் வாசித்த செய்தி ஒன்று என்னை சற்று சிந்திக்க வைத்தது. 7-10-2020 ஆனந்த விகடனில் இருந்து “பாடகராகத் தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன் கடனிலிருந்து முழுவதும் மீண்டுவந்தேன். தினமும் 5 பாட்டு பாடிவிட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு வாசலில் சேட்டு நிற்பான். ஆனா, நாளைக்கு வா என்று சொல்லும் நிலையை இறைவன் எனக்குக் கொடுக்கலை. அந்த அளவுக்கு என் குரலைக் கேட்டு வளர்த்துவிட்ட ரசிகர்களுக்குக் கைம்மாறு செய்ய இன்னொரு ஜென்மம் எனக்கு வேண்டும்!” என்பதே பாலுவின் மறு ஜென்ம ஆசை!”. அதாவது அவர் கொஞ்ச காலம் முன்பு நிதி நெருக்கடி அதாவது கடன் சுமைகளில் இருந்தார் (அவரது மகன் கீழ் நடந்து வந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் சில திரைப்படங்கள் (நல்ல படங்கள் ஆயினும்) தொடர்ந்து தோல்வி அடைந்தததால் கடனில் தள்ளப்பட்டார்) என்றும் ஆனால் அவற்றை அடைத்துவிட்டார் என்றும். அத்தகைய நெருக்கடியான காலத்திலும் சேட்டுக்கள்(கடன்காரர்கள்) தினமும் வீட்டிக்கு வந்தால் அவர்களுக்கு காசுக்கொடுக்கும் நிலையில் ஆண்டவன் தன்னை தினமும் பாடவைத்துக்கொண்டு இருந்தான் என்று கூறுவாராம் எஸ்.பி.பி. அந்த நெருக்கடியிலும் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இருந்தார். அவர் 40000பாடல்களை பாடியப்பின்பும் பல நாடுகளுக்கு பலமுறை கச்சேரி நடத்தி வருமானம் ஈன்றும் அவருக்கு பொருளாதார நெருக்கடி என்றால் சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். நாம் என்றும் கடனில் தள்ளப்படும் சூழ்நிலைகளில் சிக்கிவிடக்கூடாது. மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு ஈன்றாலும் அல்லது கடனில் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் ஒரு பொருளும் இல்லை. ஒருவரின் புகழ் அவர் செய்த செயலில் இருக்கிறது. எஸ்.பி.பிக்கு அவர் பாடிய பாடல்களில் இருந்தது. காலம் உள்ளவரை அப்பெருமை அவருக்கு இருக்கும். ஆதலால் பணக்காரர்கள் தங்கள் வசதியை நினைத்து கர்வப்படவேண்டாம். அவர் நிதியில் சற்று சராசரிக்கு மேலாக இருப்பினும் அவர் பெரிய பணக்காரர்களை விட பல பல நிலைகள் மேலே உள்ளார். ஏனெனில் பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல். எஸ்.பி.பி என்றும் பெருமைக்கு உரியவர்.

பத்து ஆண்டுகள் முன்பு விஜய் தொலைக்காட்சியில் வந்த காபி வித் அனு நிகழ்ச்சியில் எஸ்.பி.பி அவர்களும் அவரது நண்பர் கங்கை அமரன் அவர்களும் நண்பர்களாகவே பங்கேற்றனர். அவ்வளவு உற்சாகமான நிகழ்ச்சி. எஸ்.பி.பியை முழுக்க முழுக்க ஒரு குழந்தையாக பார்க்க வேண்டும் என்றால் அந்நிகழ்ச்சியை பாருங்கள். அதுப்போல் எஸ்.பி.பிக்கும் இளையராஜவுக்கும் உள்ள நட்பை பார்க்க வேண்டும் என்றால் 20-25 ஆண்டுகள் முன்பு தூர்தர்ஷன் / டி.டி.பொதிகையில் வந்த நேர்காணலை பார்க்கலாம். ஒரு சில ஆண்டுகள் முன்பு Zee தொலைக்காட்சியில் எஸ்.பி.பி ஒன்று கூறியிருப்பார். இந்த நூற்றாண்டில் (அதாவது அவர் வாழும் காலத்தில்) இந்திய இசையில் குறிப்பாக திரை இசையில் இளையராஜா எஸ்.பி.பி கூட்டணி தான் மிகச்சிறந்த கூட்டணி என்று. அதுப்போல் வேறு ஒன்றில்லை என்று. அது அவ்வளவு உண்மை. அதேப்போல் வேறு ஒரு கட்டுரையில் (07-10-2020 ஆனந்த விகடன் கட்டுரையில்) எஸ்.பி.பி கூறியதாக ஒன்றைப் படித்தேன்- எனக்காக(எஸ்.பி.பிக்காக) இறைவன் இளையராஜாவை படைத்தான். இளையராஜாவுக்காக இறைவன் என்னை (எஸ்.பி.பிபை) படைத்தான். அதுவும் உண்மை [“டேய் எனக்கு உன் அளவுக்கு பஞ்சமம் சட்ஜமம்... ராகம்லாம் தெரியாதுடா... அப்படியே ஹை பிட்ச்ல போறேன். பிசிர் தட்டுற இடத்துல சிக்னல் கொடு!”- இப்படித்தான் நோட்ஸ் கொடுக்கும் இளையராஜாவிடம் சொல்லுவார் பாலு. பெரும்பாலும் சொதப்பாமல் பாடி, “டேய் படவா, எங்கே கத்துக்கிட்டே இந்த வித்தைய?” என ராஜாவிடமே பாராட்டு வாங்கிடுவார் பாலு! “எனக்காகத்தான் ராஜா பிறந்தான்... அவனுக்காக நான் பிறந்தேன்!” - இதயத்தின் அடி ஆழத்திலிருந்து இந்த வார்த்தைகளை பாலு சொன்னபோது இந்தக்கூட்டணியின் ஆயிரக்கணக்கான பாடல்களின் முதல்புள்ளி நம் முன் மின்னலாய் வெட்டிச் செல்லும்]. 

40000 பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் ஒரு 5 சதவிகிதத்தை கூட நான் கேட்டு இருப்பேனா என்று தெரியவில்லை. ஆயினும் எனக்குப் பிடித்த சில எஸ்.பி.பி பாடல்கள் இங்கே பட்டியலிடுகிறேன். 

சின்ன மணிக் குயிலே
தென்மதுரை வைகைநதி
காதலின் தீபம் ஒன்று
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
மௌனமான நேரம்
கேளடி கண்மணி
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
மாங்குயிலே பூங்குயிலே
வானில் எங்கும் தங்க விண்மீன்கள்
நிலாவே வா
வா வெண்ணிலா
நிலவு தூங்கும் நேரம்
மாடத்திலே கன்னி மாடத்திலே
கொஞ்சி கொஞ்சி
என்ன சத்தம் இந்த நேரம்
கால காலமாக வாழும் காதலுக்கு 
சிங்களுத்து சின்ன குயிலே
சாமிக்கிட்ட சொல்லி வெச்சு
அடுக்கு மல்லித் தொடுத்து வெச்ச
வலையோசை கல கல
இளையநிலா பொழிகிறது
பனிவிழும் மலர்வனம்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
நலம் வாழ எந்நாளும்
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
மாலை சூடும் வேலை
அட மச்சம் உள்ள மச்சான புதுவித ரகம்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
உண்ணால் முடியும் தம்பி தம்பி
என்ன சமையலோ
முத்துமணி மாலை
இது ஒரு பொன்மாலை பொழுது
மன்றம் வந்த தென்றலுக்கு
மண்ணில் இந்த காதல் அன்றி
பொத்திவெச்ச மல்லிக மொட்டு
மனசு மயங்க மௌன கீதம்
துள்ளி துள்ளி நீ பாடம்மா
என்னவென்று சொல்லுவதமா
செம்பூவே பூவே பூவே
ஆணென்ன பெண்ணென்ன
வாழ வைக்கும் காதலுக்கு ஜே
ஒன்ன நினனெச்சேன் பாட்டுப்படிச்சேன்
ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வனிதா மணி
என் ஜோடி மஞ்சகுருவி
ராக்கமா கைய தட்டு
காட்டுக்குள்ளே மனசுக்குள்ளே
ராகங்கள் பதினாறு
சந்தா காற்றே
பேச கூடாது
என்னைத்தொட்டு உன்னை தொட்டு
பச்சைமல பூவு
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வானிலே தேனிலா
மலையோரும் வீசும் காற்று
வா வா பக்கம் வா
சிட்டுக்குருவி வெக்கபடுது
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
இளமை இதோ இதோ
அந்திமழை பொழிகிறது
அதிகாலை நேரமே புதிதான காலமே
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே
இதழில் கதை எழுதும் நேரமிது
கண்மணியே கண்மணியே சொல்லுறத கேளு
கூ கூ என்று குயில் கூவாதோ
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
ஓ மானே மானே
சாந்துப்பொட்டு ஒரு சந்தனப்பொட்டு
ராமன் கதைக்கேளுங்கள்
ரம் பம் பம் ஆரம்பம்
சந்தைக்கு வந்த கிளி
சிறியப் பறவை
தோட்டத்தில பாத்திக்கட்டி
வா வா வா கண்ணா வா
உச்சி வகுடு எடுத்து பிச்சி வெச்சக்கிளி
தலையை குனியும் தாமரையே
தேன் பூவே பூவேவா
ஒரே நாள் உனை நான்
என் கண்மணி என் காதலி
இளமை என்னும் பூங்காற்று
கண்மணியே காதல் என்பது
மடை திறந்து
சத்தாம் போடதே முத்தம் போதாது
பூங்காற்று உன் பேர் சொல்ல
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
எங்கிருந்தோ இளங்குருவி
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
ஆலப்போல் வேலப்போல்
அடி ராக்க முத்து ராக்கு
ஒரு நாளும் உனை மறவாத
சித்தகத்தி பூக்களே
சங்கீத ஜாதி முல்லை
வெள்ளிச் சலங்கைகள்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
நெஞ்சுக்குள்ள இன்னாருனு சொன்னா புரியுமா
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்
பாடு நிலாவே தேன் கவிதை
பெண் மானே சங்கீதம் பாடிவா
சொர்க்கம் மதுவிலே

ஆயிரம் நிலவே வா
இயற்கை என்னும் இதய கண்ணி
வான் நிலா நிலா அல்ல
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
இதோ இதோ என் பல்லவி
எங்கேயும் எப்போதும்
சிப்பி இருக்குது முத்துமிருக்குது
நீல வான ஓடையில்
சங்கீத ஸவரங்கள்
சாதி மல்லி பூச்சரமே
சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
சோகம் இனி இல்லை வானமே இல்லை
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
நந்தா நீ என் நிலா
கண்ணம்ம்மா கனவில்லையா
மலரே மௌனமா
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
அண்ணாமலை அண்ணாமலை
வந்தேண்டா பால்காரன்
வெற்றி நிச்சயம்
இக்கட ரா ரா ராமையா
ஆட்டோகாரன்
அழகு அழகு நீ நடந்தால் நடை அழகு
நலம் நலமறிய ஆவால்
முன் பனியா
வாலிபா வா வா
ஐயையோ நெஞ்சு அலையுதடி
உன்னை பார்த்த பின்பு நான்
என் கண்ணுக்கொரு நிலவா
கொண்ட சேவல் கூவும் நேரம்
கண்ணுக்குள் நூறு நிலவா
லைலா லைலா நீ தானே அந்த லைலா
சசசசனி தாசனி பாணித மாதபாமக நிவேதா பப்பதனி சரி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
நான் போகிறேன் மேலே மேலே
கம்பன் எங்கு போனான்
என்ன அழகு எத்தனை அழகு
கவிதைகள் சொல்லவா உன்பெயர் அள்ளவா
பெண் ஒருத்தி பெண் ஒருத்தி பிறந்துவிட்டால்
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம்
ஒரு கடிதம் எழுதினேன்

தொட தொட மலர்ந்ததென்ன
ஓடகார மாரித்து
மின்னலே நீ வந்ததேனடி
காதல் ரோஜாவே
அஞ்சலி அஞ்சலி
வெள்ளி மலரே
என் காதலே என் காதலே
ஒருவன் ஒருவன் முதலாளி
கொக்கு சைவ கொக்கு
சுத்தி சுத்தி வந்தீக
காதலென்னும் தேர்வெழுதி காத்திருந்த
என் வீட்டு தோட்டத்தில்
தீண்டாய் மெய் தீண்டாய்
மெதுவாகத்தான்
காதலிக்கும் பெண்ணின் கையில்
எர்ரானி கொரதானி கோப்பாலா
எனை காணவில்லையே நேற்றோடு
மானூத்து மந்தையிலே
சொல்லாயோ சோலைகிளி
தங்க தாமரை மகளே
ஸ்வாசமே ஸ்வாசமே
ஜூலை மாதம் வந்தால்
தழுவுது நழுவுது
அழகான ராட்சசியே
சக்கரை இனிக்கிற சக்கரை
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

(என்னடா ராஜேஷ், எஸ்.பி.பியோட hit-songs எல்லாத்தையும் எழுதிட்டனு கேக்றீங்களா? உண்மை. ஆனால் இதில் உள்ள 90 சதவிகித பாடல்கள் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட (curated songs list) பாடல்கள் கிடங்கில் பல ஆண்டுகளாக உள்ளது (பலரிடமும் இருக்கும்)). மேற்சொன்னவை இல்லாமல் இன்னும் சில பாடல்களை விட்டுவிட்டேன். தெலுங்கு, ஹிந்தி பாடல்களைக்கூட விட்டுவிட்டேன். 

சில மற்ற மொழிப்பாடல்கள் 
1. தெலுசா மனசா 
2. தேரே மேரே பீச்சு மே 
3. திதி தேரா தீவர் தீவானா 

ஒரு வாழ்வு போதாது அவர் பாடிய எல்லா பாடல்களையும் கேட்க. ஆனால் ஒரு வாழ்வு முழுவதும் அவர் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அவர் இறந்து ஒரு வாரமாக அவர் நினைப்பு தினம் தினம் மனதில் ஓடுகிறது. அவர் தொலைக்காட்சிகளில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகள் நேர்காணல்கள் நினைவில் நீங்காமல் உள்ளது.

நான் கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி சங்கீதம் கேட்டப்பிறகு ஒரு சிலரின் கச்சேரிகளை நேரில் கேட்டு இருக்கவேண்டும் என்று நினைத்தது உண்டு. எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி அவர்கள், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள், வயலின் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள், கிஷோரி அமோன்கர் அவர்கள், லால்குடி ஜெயராமன் அவர்கள், நாதஸ்வரம் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் ஆகியோரின் கச்சேரிகளை நேரில் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒன்று எப்பொழுதோ இறந்துவிட்டார்கள் இல்லையே அவர்கள் கச்சேரிகளை காண வாய்ப்பு அமையவில்லை என்று கூறலாம். ஆனால் எஸ்.பி.பி கச்சேரி காண வாய்ப்புகள் பல இருந்தும் அதற்கு நான் முயற்சிக்கவில்லை. அவர் இருப்பதனால் பின்பு கேட்டுக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அது எவ்வளவுப் பெரிய இழப்பு என்பதை இப்பொழுது உணர்கிறேன்.

அவர் இறந்த செய்தியை நான் கேட்க விரும்பவில்லை. அவர் தேக உடல் இன்று இல்லை என்பதை நம்ப முடியவில்லை. ஆனால் பொய்யுடம்பு ஒரு நாள் போகத்தானே வேண்டும். போய்விட்டது. ஆனால் அவர் குரல் இன்றும் உள்ளது தொழில்நுட்பம் நமக்கு கொடுத்த பரிசு. கடவுள் அவரை கொஞ்சம் சீக்கிரமாவே எடுத்துக்கொண்டுவிட்டார். அவருக்கு என்ன அவசரமோ. ஓம் சாந்தி!


எஸ்.பி.பியின் ஆல்பத்தில் இருந்து சில


































பின் குறிப்பு:
எஸ்.பி.பி அவர்கள் தனது 50 ஆண்டுகால பாட்டு பயணத்தில் 40000+ பாடல்களைப் பாடி புகழுக்கும் உலக சாதனைக்கும் சொந்தகாரர். அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். அது அவருக்கு கொடுக்கப்படும் விருது அல்ல. பாரத் ரத்னா விருது தனது க்ரீடத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய ரத்னம் எஸ்.பி.பி அவர்கள். எஸ்.பி.பிக்கு அதனால் அங்கீகாரம் இல்லை. பாரத் ரத்னா விருதுக்கு தான் அது அங்கீகாரம் மரியாதை. கொடுக்கபடவில்லை என்றால் அது அவ்விருதுக்கு தான் இழுக்கு. அவ்விருது அதன் பொருளை இழந்துவிடும். அரசு ஆவண செய்யவேண்டும்.

October 02, 2020

மலர்கள்

 

பெருநிர்வாகங்களில் பல தொழிற்துறைகள் உண்டு
ஒன்று நலிந்தாலும் மற்றவை அப்பாதிப்பை தாங்கிப்பிடிக்கும்
அதுப்போல் ஒரு பூந்தொட்டியில் ஒரு மலர் வாடினாலும்
அவ்விழப்பை மற்ற மலர்கள் சமன்செய்யும்
வாழ்வில் ஒன்றை மட்டும் அணுகாது
பல மலர்கள் இருப்பது நன்று
அகன்று பார்க்கவும் நன்று